உச்ச நீதிமன்றத் தீர்ப்பையே நீர்த்துப்போகச்செய்து, புல்டோசரை ஆயுதமாக்கும் ஆட்சியாளர்கள்

The Supreme Court did not prohibit punitive demolitions—at best, it just framed the new contours within which they occurred. The bulldozer did not retreat, it adapted.

2024 நவம்பர் மாதம், உச்ச நீதிமன்றம் “புல்டோசர் நீதி” என்ற கொடூரமான நடைமுறைக்குத் தெளிவாகத் தடை விதித்து, பரவலாகப் பாராட்டப்பட்ட ஒரு தீர்ப்பை வழங்கியது. குறிப்பாக வகுப்புவாத வன்முறை அல்லது போராட்டத்திற்குப் பிறகு, வீடுகளை இடிப்பதில் முறையான சட்ட நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என்று அது வலியுறுத்தியது. குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் தண்டனையாக வீடுகளை இடிப்பது அரசியலமைப்புக்கு விரோதமானது என்றும் நீதிமன்றம் அறிவித்தது.

முன்கூட்டியே அறிவிப்பு செய்வது, விசாரணை நடத்துவது, மேல்முறையீட்டுக்கு நேரம் கொடுப்பது போன்ற அடிப்படை நடைமுறைப் பாதுகாப்புகளை வலியுறுத்தி, வீடுகளை இடிப்பதை இறுதி நடவடிக்கையாக மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என அத்தீர்ப்பு குறிப்பிட்டது. முழுமையான விசாரணையின்றி, ‘புல்டோசர் நீதி’ என்ற பெயரில் பொத்தாம் பொதுவாகக் குற்றம்சாட்டி வீடுகளை இடிக்கும் நடைமுறையை அத்தீர்ப்பு சந்தேகத்திற்கிடமின்றி கண்டித்துத் தடை செய்தது.

The Supreme Court did not prohibit punitive demolitions, it just framed the new contours within which they occurred. The bulldozer did not retreat, it adapted.

தீர்ப்பை நீர்த்துப்போகச் செய்த தந்திரம்

ஆயினும்கூட, புல்டோசர் தொடர்ந்து அரசு நிர்வாகத்தின் ஒரு கருவியாகவே இருந்து வருகிறது. இந்தத் தீர்ப்பு, அத்தகைய நடைமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்குப் பதிலாக, வழமையாகப் புறக்கணிக்கப்படும் ஒரு சட்டமாகவே மாற்றப்பட்டது. தீர்ப்பைத் தொடர்ந்து வந்த மாதங்களில், உத்தரப் பிரதேசம், குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள முஸ்லிம் குடும்பங்கள் வசிக்கும் பகுதிகளில் புல்டோசர்கள் இடிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. வீடுகள், மசூதிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்பட்டன; வீடுகளை இழந்த குடும்பங்கள் இடம்பெயர்ந்தன; மேலும், ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் குற்றவாளிகளாகச் சித்தரிக்கப்பட்டது. வீடுகளை இடிக்கக் கூடாது எனச் சட்டம் இருந்தபோதிலும் இது நடந்தது. உச்ச நீதிமன்றம், தண்டனைக்குரிய குற்றமாக இடிப்பு நடவடிக்கைகளைத் தடை செய்யவில்லை; மாறாக, அதற்கான புதிய வரையறைகளை மட்டுமே வகுத்தது. புல்டோசர்கள் பின்வாங்கவில்லை, மாறாக, புதிய சூழலுக்கு ஏற்பத் தங்களைத் தகவமைத்துக்கொண்டன.

அரசாங்கம் தொடர்ந்து வீடுகளை இடித்து வரும் நடவடிக்கைகளை, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களை மீறும் செயலாக மட்டும் பார்ப்பது உண்மையை முழுமையாகப் புரிந்துகொள்ளாத செயலாகும். இவை சட்டத்தைப் பின்பற்றாததால் ஏற்படும் தற்காலிகப் பிழைகளோ குறைபாடுகளோ அல்ல; மாறாக, இவை உள்நோக்கத்துடன் செய்யப்படும் வன்முறைச் செயல்கள். இது, குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதன் மூலம் அல்ல, மாறாகக் குடிமக்களை, குறிப்பாக முஸ்லிம்களை, தேவையற்றவர்களாகவும் அப்புறப்படுத்தப்பட வேண்டியவர்களாகவும் சித்தரித்து, தனது அதிகாரத்தை நிலைநிறுத்தும் ஓர் அரசின் செயல்பாடு ஆகும். இந்தச் சூழலில், புல்டோசர் என்பது வெறும் பழிவாங்குவதற்கான இயந்திரம் மட்டுமல்ல; இது பெரும்பான்மைவாத ஆட்சியின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கான ஓர் அதிகாரப்பூர்வமான கருவியாகும். ‘புல்டோசர் நீதி’ என்ற பெயரில் நடைபெறும் அராஜகத்தின் இந்த அம்சத்தைத்தான் உச்ச நீதிமன்றம் புரிந்துகொள்ளத் தவறியது அல்லது புரிந்துகொள்ளாமல் இருக்க முடிவெடுத்தது. அதனால்தான் அதன் தீர்ப்பு யாராலும் பின்பற்றப்படாமல் தோல்வியடைந்தது. வீடு, மசூதி அல்லது மீனவர் குடியிருப்புகளை இடிப்பதன் மூலம் அனைவருக்கும் ஒரு பாடம் கற்பிக்கப்பட்டது. அதாவது, வீடுகளை இடித்து மக்களை நிர்க்கதியாக்குவதன் மூலம், சுற்றியுள்ள முஸ்லிம்களுக்கும், ‘விரும்பத்தகாதவர்கள்’ என முத்திரைகுத்தப்பட்ட பிற சமூகத்தினருக்கும், அவர்களின் வாழ்வுரிமை நிபந்தனைக்குட்பட்டது என்றும், தங்குமிடம் தற்காலிகமானது என்றும் உணர்த்தப்படுகிறது. மேலும், சட்டத்தின் ஆட்சியைத் தமக்கு ஏற்றவாறு வளைத்துக்கொள்ளலாம் என்றும், சட்டத்திற்குக் கீழ்ப்படிவதை விட ஆட்சியைத் திறமையாக நிர்வகிப்பதே முக்கியம் என்றும் அதிகாரிகளுக்கு இது கற்பிக்கிறது.

வழக்கு 1: குஷிநகர் மசூதி இடிப்பு – சட்ட அவமதிப்பின் சாட்சியம்

உத்தரப் பிரதேசத்தின் குஷிநகரில் உள்ள மத்னி மசூதி இடிக்கப்பட்ட வழக்கில், சட்டம் மதிக்கப்படவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. 2025 பிப்ரவரி 9 அன்று, உள்ளூர் அதிகாரிகள் பல தசாப்தங்களாக நின்றுகொண்டிருந்த பழமையான மசூதியின் முன்பகுதியை இடிக்க புல்டோசர்களைக் கொண்டு வந்தனர். உயர் நீதிமன்றத் தடை உத்தரவு காலாவதியான மறுநாளே இந்த இடிப்புப் பணி நடந்தது. மசூதி, நகராட்சியின் கட்டிட விதிகளை மீறியதாக (சட்டவிரோத கட்டிடம்) அதிகாரிகள் கூறினர். ஆனால் மசூதியின் நிர்வாகக் குழு, அந்த மசூதி சட்டப்பூர்வமாகத் தங்களுக்குச் சொந்தமான நிலத்தில், 1999-ஆம் ஆண்டே வழங்கப்பட்ட கட்டிட அனுமதிகளைப் பின்பற்றி கட்டப்பட்டதாகக் கூறியது. மசூதி நிர்வாகக் குழுவின் நியாயங்களைப் பொருட்படுத்தாமல், மாநகராட்சி நிர்வாகம் மசூதியை இடித்துத் தள்ளியது. நீதிமன்றத்தின் புதிய உத்தரவுக்கோ, வழிகாட்டுதலுக்கோ அல்லது மேல்முறையீடுகளைப் பரிசீலிப்பதற்கோ காத்திருக்கத் தேவையில்லை என மாநகராட்சி நிர்வாகம் மசூதியை இடித்தது.

சட்டப்பூர்வமான நடவடிக்கை முடிந்தது; விசாரணை நடைபெற்றது; அறிவிப்பு வெளியிடப்பட்டது; காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது; பின்னர் இடிப்புப் பணி நடந்தது. இது சொல்லும் செய்தி தெளிவானது: உங்களிடம் ஆவணங்கள் இருந்தபோதிலும், உங்கள் மசூதி இடித்துத் தள்ளப்படலாம். இது சட்டம் இல்லாததால் நடைபெறும் கொடுமை அல்ல; மாறாக, சட்டத்தின் சாரத்தை நீக்கி, அதனை வன்முறைக்கான ஆயுதமாகச் செயல்படுத்துவதாகும். இதற்குப் பதிலளிக்கும் விதமாக, உச்ச நீதிமன்றம் பொறுப்பான மாவட்ட அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்கியது. ஆனால், அதற்குள் மசூதி ஏற்கனவே இடிக்கப்பட்டுச் சேதமடைந்துவிட்டது. அதன் புனிதத்தன்மை மீறப்பட்டு, அதன் சுவர்கள் உடைக்கப்பட்டிருந்தன. அந்த இடம் ஏற்கனவே தண்டனைக்கு உள்ளாக்கப்பட்ட வேண்டிய இடமாகக் குறிவைக்கப்பட்டு, அந்தத் தண்டனையும் பகிரங்கமாக அமலாக்கப்பட்டது. எந்தச் சட்டத் திருத்தமும், திட்டமிட்ட அந்த மதவாத அரசியலின் வன்முறையைச் சரிசெய்ய முடியாது.

வழக்கு 2: பெய்ட் துவாரகா – வளர்ச்சியின் பெயரால் ஒரு சமூகத்தைக் குறிவைத்தல்

குஜராத்தில் வளர்ச்சியின் பெயரால் எளிய மக்கள் புறக்கணிக்கப்படுவது மறைக்கப்பட்டு வருகிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகு, புல்டோசர் அதிகத் தீவிரத்துடன் மீண்டும் இடிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. 2025 ஜனவரி மாதம், ‘தேவபூமி’ எனப்படும் துவாரகா மாவட்டத்தின் கடற்கரையில் உள்ள ஒரு தீவான “பெய்ட் துவாரகாவில்” 250-க்கும் மேற்பட்ட வீடுகளும் வழிபாட்டுத் தலங்களும் இடித்துத்தள்ளப்பட்டன. இது சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தேசியப் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பு எதிர்ப்பு நடவடிக்கை என்று அரசு கூறியது. ஆனால், களத்தில் உள்ள உண்மையோ வேறு.

இந்த இடிப்புகள் முதன்மையாக முஸ்லிம் சமூகத்தினரின் குடும்பங்கள், மீனவர்கள், வர்த்தகர்கள் மற்றும் வழிபாட்டுத் தலப் பராமரிப்பாளர்களைக் குறிவைத்தே நடத்தப்பட்டன. இவர்களில் பலர் பல தலைமுறைகளாக அத்தீவில் வசித்து வந்தனர். பல தசாப்தங்களாகத் தங்கள் வீடுகளில் வசித்து வந்த குடும்பத்தினருக்கு, வீடுகள் இடிக்கப்படுவதற்குச் சில நாட்கள் முன்பாக மட்டுமே, போதிய கால அவகாசம் இன்றி அறிவிப்பு வழங்கப்பட்டதாகக் கூறினர். சிலர் தங்களுக்கு ஒருபோதும் தனிப்பட்ட முறையில் அரசின் அறிவிப்பு கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பானது, வீடுகளை இடிப்பதற்கு முன் பாதிக்கப்பட்ட மக்கள் மேல்முறையீடு செய்ய 15 நாட்கள் மற்றும் இடிப்புத் தேதிக்கு முன்பாகக் கொடுக்கப்படும் இறுதி உத்தரவுக்குப் பிறகு மேலும் 15 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்பட வேண்டும் என்பதை கட்டாயமாக்கியது. ஆனால் அரசு அதிகாரிகளோ, கட்டாயமாக அமல்படுத்த வேண்டியதை விட்டுவிட்டு, புல்டோசர்கள் எளிய முஸ்லிம் மற்றும் மீனவக் குடும்பங்களின் வீடுகளையும், மசூதிகளையும், தர்காக்களையும் இடிக்கும்போது, அங்கிருக்கும் இந்துக்களுக்குச் சொந்தமான சொத்துக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்துகொண்டிருந்தனர்.

வழிபாட்டிடமாகவும் வாழ்விடமாகவும் இருந்த அத்தீவிலிருந்து முஸ்லிம் குடும்பங்கள் விரைவாகத் துரத்தப்பட்டனர். சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக, நாட்டின் பாதுகாப்பிற்காக ஒழுங்கமைகின்றோம் என்ற போர்வையில் அவர்களது வாழ்வாதாரம் நாசமாக்கப்பட்டது. உள்ளூர் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக முன்வைக்கப்பட்ட வாதங்கள், நிலத்தைப் பாதுகாப்பதற்கானவை அல்ல; மாறாக, மனித வாழ்வை அழிக்கவே அவை பயன்படுத்தப்பட்டன. இது, வகுப்புவாத அடிப்படையில் முஸ்லிம்களைத் துரத்துவதற்கு, மதச்சார்பற்ற நாட்டின் நன்மை என்ற பெயரில் ஒரு திரையாகப் பயன்படுத்தப்பட்டது. இத்தகைய குறிப்பிட்ட இஸ்லாமிய வெறுப்புதான் “புல்டோசர் நீதியை” நயவஞ்சகம் நிறைந்ததாக வைத்திருக்கிறது. சட்ட ஒழுங்கு மற்றும் விதிமுறைகளின் பெயரில் அரசு வன்முறையை நடத்துகிறது.

பெய்ட் துவாரகாவில் இடம்பெயர்ந்தவர்களுக்குப் போதிய அளவில் மறுவாழ்வு உதவிகள் எதுவும் வழங்கப்படவில்லை. அவர்களின் உடைமைகள் மணலில் புதைக்கப்பட்டன; அவர்களின் வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டன; அவர்களின் வரலாறுகள் அழிக்கப்பட்டன. அரசாங்கம் தான் செய்ததை மறுக்கவில்லை; மாறாக, வீடுகளை இடித்தது சட்டப்பூர்வமானது என்றே வலியுறுத்தியது. இந்தப் பேச்சு, வீடுகளை இடிப்பதன் மூலம் வெளிப்படும் அந்த நிர்வாகத்தின் மிருகத்தனமான செயல்திறனைக் காட்டுகிறது. இங்கு சட்டம் இல்லை என்றோ அல்லது சட்டம் மீறப்படவேயில்லை என்றோ சொல்ல முடியாது; மாறாக, நீதிமன்றங்களால் உத்தரவிடப்பட்ட பிறகும், அது அரசால் வேண்டுமென்றே நிராகரிக்கப்படுகிறது.

வழக்கு 3: மகாராஷ்டிரா – வன்முறைக்குப் பிந்தைய பழிவாங்கும் நடவடிக்கை

மகாராஷ்டிராவின் நாக்பூரில் 2025 மார்ச் 17 அன்று, வலதுசாரிக் குழுக்கள் நடத்திய போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. உடனடியாகக் காவல்துறை, பல முஸ்லிம் ஆண்களைக் கலவரத்தைத் தூண்டியதாகக் குற்றம்சாட்டிக் கைது செய்தது. அவர்களில் ஒருவர் உள்ளூர் அரசியல் ஆர்வலரான ஃபஹீம் கான். சில நாட்களுக்குள், நாக்பூர் நகராட்சி, கானின் குடும்பத்திற்கு அவர்கள் வீட்டை இடிக்கப்போவதாக நோட்டீஸ் அனுப்பியது. கானின் குடும்பம் பதிலளிக்க வெறும் 24 மணிநேரம் மட்டுமே அவகாசம் கொடுக்கப்பட்டது. கான், மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையை அணுகி வீட்டை இடிக்கத் தடை வாங்கியபோதும், பல பத்தாண்டுகளாக இருந்த அவர்களின் வீட்டின் ஒரு பகுதியை நகராட்சி நிர்வாகம் ஏற்கனவே இடித்து விட்டது. அந்த வீடு அங்கீகரிக்கப்படாத கட்டிடம் என்று காரணம் கூறியது. இது சட்டப்பூர்வ நடவடிக்கை அல்ல, மாறாக இஸ்லாமிய வெறுப்பின் வெளிப்பாடாகவே இருந்தது: “நீங்கள் எதிர்ப்பு தெரிவித்தால், உங்கள் வீட்டையும் இடித்து உங்களையும் தண்டிப்போம்.”

இது அக்கலவரத்தில் தொடர்புபடுத்தப்பட்ட ஒருவருக்கு மட்டும் நடந்ததல்ல. கலவரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட பிற முஸ்லிம் ஆண்களின் குடும்பங்களுக்கும், அவர்களின் வீடுகளை இடிக்கப்போவதாக மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. அவர்களில் சிலர் வயதானவர்கள்; சிலருக்கு வன்முறையுடன் எந்தத் தொடர்பும் இல்லை. இவர்களின் வீடுகள் கட்டிட விதிமீறல்கள் என்பதற்காக அல்ல, மாறாகக் குற்றவியல் குற்றச்சாட்டுடன் தொடர்புபடுத்தப்பட்டதற்காகவே குறிவைக்கப்பட்டன. இது “சட்டத்திற்குப் புறம்பான கட்டிடம்” என்று கூறி  பொத்தாம் பொதுவாக வழங்கப்படும் மிக மோசமான பழிவாங்கும் தண்டனையாகும். இந்தச் சம்பவத்திலும், நீதிமன்ற உத்தரவும் பாதுகாப்பும் அர்த்தமற்றதாக மாறியது. சேதம் ஏற்பட்டது; வீடுகள் இடிக்கப்பட்டது உண்மையான சம்பவம், அது உருவாக்கிய பயம் தொடர்ந்தது. அதன்பிறகு சட்டம் திருத்தப்பட்டு வந்தது, ஆனால் அது இஸ்லாமியர்களின் பாதுகாப்பிற்காக அல்ல.

சட்டத்தை ஆயுதமாக்கும் நுட்பம்

குஷிநகர், பெய்ட் துவாரகா, நாக்பூர் ஆகிய இடங்களில், புல்டோசர் வெறுமனே அழிவுக்கான கருவியாக மட்டுமல்லாமல், இடத்தை விட்டு மக்களை துரத்தும்  தொழில்நுட்பமாகவும் செயல்பட்டது. இது முஸ்லிம் மக்களின் வாழ்க்கையை அர்த்தமற்றதாக மாற்றியது. அது அவர்களின் தங்குமிடத்தை அச்சுறுத்தலாகவும், அவர்கள் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டைத் தண்டனையாகவும், அவர்களது இருப்பை ஆக்கிரமிப்பாகவும் மாற்றியது.

வீடுகளை இடிப்பது எப்போதும் “சட்டத்திற்கு எதிரானவை” அல்ல. மாறாக, பெரும்பான்மையினரின் விருப்பத்திற்கு ஏற்ப சட்டத்தை வளைக்கும் ஓர் ஆட்சியின் கீழ், சட்டம் என்னவாக மாறுகிறதோ, அதுவே இதுபோன்ற இடிப்பு நடவடிக்கைகளாக வெளிப்படுகின்றன. விசாரணை, தீர்ப்பு அல்லது தண்டனைக்காகக் காத்திருக்காமல், உடனடித் தண்டனையைக் கோரும் ஒரு அரசியல் ஏக்கத்தை, இந்த புல்டோசர்கள் மூலம் வீடுகளை இடிப்பது திருப்திப்படுத்துகிறது. குற்றம் சாட்டப்பட்டவர், அவர்களின் குடும்பம், அவர்களின் வீடு ஆகியவற்றை உடனடியாக அழிக்க வேண்டும் என்ற இந்தத் தேவைக்கு, நகராட்சிச் சட்டங்கள் சரியான கருவியாக அமைகின்றன. இந்தச் சட்டங்கள் காகிதத்தில் நடுநிலையாகத் தோன்றினாலும், நடைமுறையில் வன்முறைக்கு வழிவகுக்கின்றன.

இதனால்தான் சட்டத்தால் மட்டுமே புல்டோசரை நிறுத்திவிட முடியாது. ஏனெனில், இந்தச் சூழலில் சட்டம் ஒரு நடுநிலையான களம் அல்ல. இது வெறுமனே தவறாகப் பயன்படுத்தப்படவில்லை; மாறாக, மறுசீரமைக்கப்பட்டு, வன்முறைக்கான கருவியாகச் செயல்படுத்தப்படுகிறது. பழிவாங்கலை நியாயப்படுத்த அரசு விதிமுறைகளை மேற்கோள் காட்ட முடிகின்ற வரையிலும், சித்தாந்த அடிப்படையிலான அழிப்புக்கு சேவை செய்ய நடைமுறைச் சட்டங்களைக் கையாள முடிகின்ற வரையிலும், புல்டோசர்கள் மூலம் வீடுகளை இடிக்கும் பணி தொடர்ந்து நடக்கும்.

பொறுப்பேற்பு இல்லாத இழப்பீடு: நீதித்துறையின் முரண்பட்ட நீதி

2021-இல் உத்தரப் பிரதேசம், பிரயாக்ராஜில் சட்டவிரோதமாக வீடுகள் இடிக்கப்பட்டதற்கு எதிராக நடந்த போராட்டங்களுக்குப் பிறகு, 2025 ஏப்ரல் மாதம், பாதிக்கப்பட்ட ஆறு குடும்பங்களுக்கு பிரயாக்ராஜ் மேம்பாட்டு ஆணையம் ரூ.60 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வீடுகள் ஒரு சட்டவிரோத கும்பலுக்குச் சொந்தமானவை என்று அரசு கூறியது; ஆனால் உரிமையாளர்கள் அந்தக் குற்றச்சாட்டை மறுத்தனர். வீடுகளை இடித்தபோது எந்தவொரு முறையான நடைமுறையையும் அரசு நிர்வாகம் பின்பற்றவில்லை என்று நீதிமன்றம் கண்டறிந்தது. வீடுகள் இடிப்பதற்கு முன் வழங்கப்பட்ட நோட்டீஸ்கள் கடமைக்காக மட்டுமே வழங்கப்பட்டிருந்தன; எந்த விசாரணையும் இன்றி வீடுகள் இடிக்கப்பட்டிருந்தன. தீர்ப்பை வழங்கிய நீதிபதி அபய் ஓகா, இவ்வாறு வீடுகள் இடிக்கப்பட்டது “நீதிமன்றத்தின் மனசாட்சியை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது” என்று குறிப்பிட்டார். நீதிபதிகள் தங்கள் கண்டனத்தில் தெளிவாக இருந்தனர். அரசு நிர்வாகம் செய்த தவறைச் சரிசெய்யவும், வீடுகளை புனரமைக்கவும் உத்தரவிட்டனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கான வீட்டுவசதி மற்றும் தங்குமிடத்திற்கான அடிப்படை உரிமைகளை அரசுக்கு நினைவூட்டினர். இருப்பினும், எந்த அதிகாரியும் தனிப்பட்ட முறையில் அந்தத் தவறுக்குப் பொறுப்பேற்கவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு அரசாங்கத்தின் பொது நிதியிலிருந்துதானே வரும்; வீடுகளை இடிக்க உத்தரவிட்டவர்களின் அல்லது உத்தரவை நிறைவேற்றிய நபர்களின் சம்பளம் அல்லது ஓய்வூதியத்திலிருந்து கொடுக்கப்படுவதில்லையே.

இதுதான் புல்டோசர் ஆட்சியில் நீதித்துறை தலையீட்டின் மையத்தில் உள்ள முரண்பாடு இதுதான். கணக்கீடுகளே இல்லாத நிவாரணம். இவ்வாறு வீடுகள் இடிக்கப்பட்டதைச் சட்டவிரோதம் என நீதிமன்றங்கள் அங்கீகரித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கினாலும், தண்டனையிலிருந்து விலக்களிக்கும் இந்தக் கட்டமைப்பை அகற்றாவிட்டால், இடிப்புக்குக் காரணமான அதிகாரிகளின் பெயர்களைக் குறிப்பிட்டுத் தண்டிக்காவிட்டால், நீதித்துறை என்பது அரசு வன்முறைக்குப் பின்னால் இருந்து சரிசெய்யும் ஒரு பகுதியாக மாறும் அபாயம் உள்ளது.

இது போன்ற நடவடிக்கைகள், இடிப்புகளைத் தடுக்கும் வழிமுறைகள் அல்ல; மாறாக, இடித்த பிறகு அதைச் சரிசெய்யும் ஒரு வழிமுறையாகும். இவ்வாறுதான் இந்தச் சுழற்சி தொடர்கிறது: அரசு வீடுகளை இடிக்கும்; பாதிக்கப்பட்டவர்கள் வழக்குத் தொடுப்பார்கள்; நீதிமன்றங்கள் இழப்பீடு வழங்கலாம்; ஆனால் அதிகாரிகள் பாதுகாக்கப்படுவார்கள். அதுமட்டுமின்றி, அதிகார வரம்பை மீறும் நிர்வாகத்தின் செயல்கள் அப்படியே இருக்கும். பிறகு புல்டோசர்  ஒரு சூதாட்டமாக மாறும், குறிப்பாக வீடுகளை இடித்தவர்கள் அதற்கு உத்தரவிட்டவர்களின் சொத்துகளை ஊதியத்தை ஓய்வூதியத்தை எடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக தராமல் பொது பணத்தை மட்டுமே நிவாரணமாக செலவழிக்கும் போது அது அரசியல் ஆதாயத்தை வழங்கும்.

அரசாங்கங்கள் உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும், வீடுகளை இடிப்பதைப் பழிவாங்கும் நடவடிக்கையாகப் பயன்படுத்த முடியாது, நிர்வாகம் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்ள முடியாது என்று இடிப்புகளுக்கு எதிரான உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்கள் ஒரு வரையறையைக் கொடுத்துள்ளன. கூடுதலாக, வீடுகள், மசூதிகள் என கட்டடங்களை இடிப்பதற்கான உத்தரவுகள், காரணம் கேட்கும் அறிவிப்புகள் மற்றும் அது தொடர்பான நடைமுறைகளை ஆவணப்படுத்த, மூன்று மாதங்களுக்குள் டிஜிட்டல் இணையதளங்களை உருவாக்குமாறு நகராட்சி அமைப்புகளுக்கு வழிகாட்டுதல் உத்தரவிடப்பட்டது. இந்த முயற்சி வீடுகளை இடிக்கும் நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.

இருப்பினும், 2025 ஏப்ரல் மாத நிலவரப்படி, எந்த மாநில அரசும் அத்தகைய கண்காணிப்பு இணையதளத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தவில்லை. இந்தத் தோல்வி, மாநில அளவிலான செயல்பாட்டிலும் இணக்கத்திலும் உள்ள குறிப்பிடத்தக்க சவால்களை எடுத்துக்காட்டுகிறது. இது, அரசே தலைமையேற்று நடத்தும் இடிப்பு நடவடிக்கைகளில் தண்டனையிலிருந்து விலக்கு மற்றும் மேற்பார்வையின்மை போன்ற பெரும் பிரச்சினைகளையும் பிரதிபலிக்கிறது. மாநில அரசுகள், தங்கள் அன்றாட நடவடிக்கைகளில் நீதிமன்றத்தின் வரையறைகளை அங்கீகரிக்க மறுத்துவிட்டன. அவை புல்டோசர்களைக் கொண்டு, மீண்டும் மீண்டும் வரையறைகளை மீறிச் செல்கின்றன.

தீர்வு என்ன? இழப்பீடு அல்ல, பொறுப்பேற்பே தீர்வு

இப்போது ஆபத்தில் இருப்பது நீதிமன்றத் தீர்ப்பின் நேர்மை மட்டுமல்ல; அரசியலமைப்பு ஜனநாயகத்தில் சட்டப் பாதுகாப்பு, அதாவது சட்டத்தின் ஆட்சியே ஆபத்தில் உள்ளது. எந்தக் கேள்வியும் கேட்காமல் வீடுகளை இடிக்க முடியுமானால், ஒழுங்குமுறை என்ற பெயரில் ஒரு சமூகத்தை இடம்பெயரச் செய்ய முடியுமானால், நகராட்சி அலுவலகங்களால் நீதிமன்றத்தின் தீர்ப்புகளைப் புறக்கணிக்க முடியுமானால், சட்டம் ஏற்கனவே அதன் வலிமையை இழந்துவிட்டது என்றுதான் அர்த்தம். இந்தச் சுழற்சியை உடைக்க, இழப்பீடு மட்டும் போதாது; தவறுக்குப் பொறுப்பேற்க வைப்பது அவசியம். நீதிமன்ற உத்தரவுகளை மீறும் அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும். உரிய நடைமுறை இல்லாமல் மேற்கொள்ளப்படும் இடிப்புகள் கண்டனத்திற்குரியவை மட்டுமல்ல, அவை தண்டனைக்குரிய குற்றங்களாகும். மன்னிப்பு அல்லது இழப்பீட்டுடன் தப்பிவிடாமல், தற்காலிகப் பணிநீக்கம் மற்றும் வழக்குத் தொடர்வதன் மூலமும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

‘புல்டோசர் நீதி’ என்ற பெயரில் வீடுகளை இடிப்பதற்கான செலவை, பாதிக்கப்பட்டவர்களோ பொதுக் கருவூலமோ அல்ல, இடிப்புக்குக் காரணமான அதிகாரிகளே ஏற்க வேண்டும். அது நடக்கும் வரை, புல்டோசர் அரசியலமைப்பை விட சக்திவாய்ந்ததாகவே இருக்கும். அது நிலத்தை மீண்டும் மீண்டும் மாற்றியமைத்துக்கொண்டே இருக்கும்; தனக்கு விருப்பமில்லாதவர்களின் இருப்பை அழிக்கும்; அரச வன்முறையை நிகழ்த்தும். நீதிமன்றத்தின் தீர்ப்பு, எவ்வளவு நல்ல நோக்கம் கொண்டிருந்தாலும், அரசு நிர்வாகத்தின் விருப்பத்தின் கீழ் நசுக்கப்பட்ட ஒரு காகிதமாகவே இருக்கும்.

தமிழில்: சிராஜுத்தீன் 

This piece was translated by Sirajudeen in collaboration with maattru.in. Read the original piece in English here.

Join us