இடித்துத் தள்ளப்பட்ட ஷாமா பேகத்தின் வீடும் வாழ்க்கையும்

The Many Demolitions of Shama Begum's Life and Property

In collaboration with maattru.in, The Polis Project is publishing The Demolitions Project in Tamil.

22 ஆண்டுகால கனவு இல்லம்

மத்தியப் பிரதேச மாநிலம், டிண்டோரி மாவட்டத்தின் ஷாபுரா என்ற ஊரில், ஒரு குடும்பத்தின் வாழ்க்கைப் போராட்டங்களையும், பல்வேறு மகிழ்ச்சியான நினைவுகளையும், கனவுகளையும் சாட்சியாகச் சுமந்து கொண்டு சுமார் 22 ஆண்டுகளாக அந்த வீடு நிமிர்ந்து நின்றது. ஷாமா பேகம் மற்றும் ஹாலிம் கான் தம்பதியினரின் ஆறு வருடங்களுக்கு மேலான கடினமான உழைப்பில் கட்டப்பட்ட வாழ்நாள் நினைவுகளைச் சுமந்து நிற்கின்ற அந்த வீட்டில், அவர்கள் குடியேறிய ஆண்டே முதல் மகனான ஆசிப் கான் பிறந்தான். இவ்வாறு மற்ற எவரையும் போலவே அனைத்து ஏற்ற இறக்கங்களுடன் அவர்களது வாழ்க்கை இயல்பாகப் போய்க்கொண்டிருந்தது. அப்போது, 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதியானது, என்றும் மறக்க முடியாத, அவர்களது வாழ்க்கையையே திருப்பிப் போட்ட ஒரு நாளாக அமைந்தது. இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் தொடங்கிய இரண்டாம் நாள் அதிகாலைப் பொழுதில், விரதத்திற்கு முந்தைய செஹ்ரி உணவினை எடுத்துக்கொள்ளத் தொடங்கியிருந்தது ஷாமா பேகத்தின் குடும்பம்.

விதியை மாற்றிய ஒரு தொலைபேசி அழைப்பு

ஷாபுராவின் பள்ளிவாசலில் ஃபஜ்ர் தொழுகைக்கான அழைப்பு ஒலித்து முடிந்த சில நிமிடங்களில், ஆசிப்பின் அலைபேசிக்கு சாக்ஷி சாகுவின் அழைப்பு வந்தது. ஆசிப் கானும், சாக்ஷி என்ற அந்த இந்துப் பெண்ணும் ஆறு வருடங்களாகக் காதலித்து வந்தனர். இந்தக் காதல் விவகாரம் சாக்ஷியின் வீட்டாருக்குத் தெரியவர, ‘ஒரு இஸ்லாமியரைத் தங்கள் பெண் காதலிப்பதா?’ என்ற ஆத்திரத்தில் அந்தப் பெண்ணை வீட்டிலேயே அடைத்து வைத்தனர். இந்நிலையில், ஆசிப்பை அலைபேசி மூலம் தொடர்பு கொண்ட சாக்ஷி, தன் குடும்பத்தினர் தன்னைக் கொடுமைப்படுத்துவதாகவும், தொலைதூரத்தில் உள்ள பெயர் தெரியாத ஊரில் இருக்கும் உறவினர் ஒருவரது வீட்டிற்குத் தன்னை அனுப்ப இருப்பதாகவும் கூறி, தன்னைக் காப்பாற்றுமாறு கதறி அழுதார். இதைத் தொடர்ந்து, காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர்.

அச்சுறுத்தலும் கைது நடவடிக்கையும்

அன்று காலையில், ஷாமா மற்றும் ஹாலிம் தம்பதியினரின் வீட்டை சாக்ஷியின் குடும்பத்தினர் முற்றுகையிட்டனர். தங்கள் மகள் அவளின் சொந்த விருப்பத்தின்படியே காதலனோடு சென்றது தெரிந்திருந்தும், வேண்டுமென்றே ஷாமாவின் குடும்பத்தை மிரட்டியது அந்தக் கும்பல். “உங்கள் பெண்ணை அனுப்பாவிட்டால், உங்கள் குடும்பத்தின் மீது கடத்தல் வழக்கு பதிவு செய்வோம்” என்று மிரட்டல் விடுத்தனர். அந்தப் பகுதியில் அப்பாவி இஸ்லாமியர்களின் வீடுகள் “புல்டோசர் நீதி” என்ற பெயரில் தொடர்ச்சியாக இடிக்கப்படுவது குறித்து நன்கு அறிந்திருந்த ஷாமா மற்றும் ஹாலிம், தங்கள் குடும்பத்திற்கு வரக்கூடிய ஆபத்துகளை உணர்ந்துகொண்டனர். எனவே, அவர்கள் அப்பெண்ணின் குடும்பத்தினரிடம் கெஞ்சத் தொடங்கினர். தங்கள் மகன் குறித்து எந்தத் தகவலும் தங்களுக்குத் தெரியாது என்று மன்றாடினர்.

மதிய வேளையில், அதுவரை அணைத்து வைத்திருந்த தனது அலைபேசியை இயக்கி, தந்தை ஹாலிமுக்கு அழைத்தான் ஆசிப். அவரிடம் அவசரமாகப் பேசிய ஹாலிம், “மகனே! நீ உடனடியாக அந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு திரும்பி வந்துவிடு. இல்லையென்றால் நமது வீட்டை இடித்துத் தள்ளிவிடுவார்கள்,” என்றார். மேலும், மகனுடன் இருந்த சாக்ஷியிடம், “மகளே! என் மகனோடு திரும்பி வந்துவிடு. நான் உன் பெற்றோரிடம் பேசி உங்களைச் சேர்த்து வைக்கிறேன்,” என்றும் மன்றாடினார்.

ஆனால், தன்னுடைய பெற்றோர் மற்றும் உறவினர்கள் குறித்து நன்கு அறிந்திருந்த சாக்ஷி, திரும்பி வர மறுத்துவிட்டாள். இந்நிலையில், அன்று மாலையே காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு, முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டது. உடனடியாக ஹாலிமைத் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்தது காவல்துறை. அந்தக் குடும்பம் மொத்தமாக நிலைகுலைந்து போனது.

தனிமையும் துயரமும்

நகரம் முழுவதிலும் ஒருவிதமான விரோதமும் பயமும் பரவியது. தங்களுக்காகக் குரல் கொடுக்க யாரும் முன்வராத நிலையில், ஷாமா தனது மகளுடன் கையில் கிடைத்த துணிகளை எடுத்துக்கொண்டு, தஞ்சம் தேடி சில வீட்டுக் கதவுகளைத் தட்டினார். அந்த ஊரில் இருந்த பெரும்பாலான உறவினர்கள், பின்விளைவுகளுக்குப் பயந்து உதவி செய்யாமல் அமைதியையே பதிலாகக் கொடுத்தனர்.

“மனிதர்கள் எப்போதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. நாங்கள் அனைத்தையும் இழந்த பிறகு, எங்கள் மீதான அவர்களின் பார்வை மாறிவிட்டது. இந்தத் துயரம் மிகுந்த சூழலில், உணவு கூட எங்களுக்குப் பற்றாக்குறையாக இருந்தது. இந்த புனித ரமலான், எங்களுக்கு வறுமையையும் அவமானங்களையும் சகித்துக்கொள்ளும் பாடத்தை வழங்குவதாக அமைந்துவிட்டது,” என்று துயரம் மிகுந்த அந்த நாட்களை நினைவுகூர்கிறார் ஷாமா.

வாழ்வை நொறுக்கிய புல்டோசர்

சரியாக ஐந்து நாட்கள் கழித்து, ஏப்ரல் 8 ஆம் தேதி, எவ்வித முன் அறிவிப்பும் இன்றி, சட்ட நெறிமுறைகள் எதையும் கடைப்பிடிக்காமல் ஷாமாவின் வீட்டின் முன்பு வந்து நின்றது அந்த புல்டோசர். எதற்காகவும் காத்திருக்காமல், ஷாமாவின் வீட்டை இடிக்கும் பணி தொடங்கியது. தங்களது வாழ்நாள் உழைப்பு, தனது கணவர் திருமணப் பரிசாகத் தனக்கு அளித்த அன்பு நிறைந்த அந்த வீடு, சில நிமிடங்களில் சுக்குநூறாக உடைந்து நொறுங்குவதை காணொளி அழைப்பின் வழியே பார்க்க வேண்டிய கொடிய நிலையில் இருந்தார் ஷாமா. இடிப்புப் படலம் அதோடு முடியவில்லை. வீட்டின் அருகே இருந்த ஆசிப்பின் மிட்டாய் கடையையும், அவரது இளைய சகோதரர் நடத்தி வந்த மற்றொரு கடையையும் சேர்த்தே இடித்தது அந்த புல்டோசர். ஒரு குடும்பத்தின் அடிப்படைத் தேவையான இருப்பிடத்தையும், வாழ்வாதாரத்திற்கு வழி செய்த சிறு தொழில்களையும் மொத்தமாக இழந்து நின்றது ஹாலிம் மற்றும் ஷாமாவின் குடும்பம்.

“22 வருடங்களாக நாங்கள் வாழ்ந்த வீடு, ஒரே நாளில் சுக்குநூறாக உடைக்கப்படுவதைத் தடுக்க வழியின்றிப் பார்க்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன். எங்கள் குழந்தைகளின் ஆசைகள், கனவுகள், சிறிய மற்றும் பெரிய குறிக்கோள்கள் மட்டுமல்ல, வாழ்வதற்கான அவர்களின் விருப்பத்தையே சிதைத்தது அந்தச் சம்பவம். அந்த புல்டோசர் ஒரு வீட்டை மட்டும் இடிக்கவில்லை; எங்கள் வாழ்க்கையையும் சேர்த்தே நொறுக்கிவிட்டது”

என்று தங்களுடைய வீடு இடிக்கப்பட்ட அந்தக் கொடிய காட்சியை விவரித்தார் ஷாமா.

அதிகாரிகளின் நியாயப்படுத்தலும் உண்மையும்

ஹாலிம் கானின் வீடு மற்றும் கடைகள் அரசாங்க நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டவை என்றும், அந்தக் கட்டிடங்கள் சட்டத்திற்குப் புறம்பானவை என்றும் கூறி, தங்கள் இடிப்பு நடவடிக்கைகளுக்கு அரசு அதிகாரிகள் நியாயம் கற்பித்தனர். ஆனால், சமூக வலைத்தளங்களில் அவர்கள் அடித்துக்கொண்ட தம்பட்டமே இது தவறான நடவடிக்கை என்பதை உணர்த்துவதாக இருந்தது. “டிண்டோரி மாவட்டத்தில் மாணவியைக் கடத்திய வழக்கில் தொடர்புடைய ஆசிப் கானின் வீடு மற்றும் கடைகள் இடிக்கப்பட்டன” என்று அந்த மாவட்ட ஆட்சியர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் புகைப்படத்தோடு பெருமையாகப் பதிவு செய்திருந்ததே இதற்குச் சாட்சி.

அரசு தங்களுக்கு வழங்கியிருந்த பட்டா மற்றும் தன் பெயரிலும் ஹாலிமின் பெயரிலும் உள்ள வீட்டுப் பத்திரம் ஆகிய சட்டப்பூர்வ ஆவணங்களைக் காட்டி, அரசு அதிகாரிகளின் குற்றச்சாட்டுகள் முழுமையான பொய் என மறுத்தார் ஷாமா. மேலும், அந்த வீடு மாநில அரசு கிராமப்புற ஏழைகளுக்காகக் கொண்டு வந்த “இந்திரா ஆவாஸ் யோஜனா” திட்டத்தின் கீழ் கட்டப்பட்டது என்றும், அந்த இடத்தில் அந்த வீடு 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சட்டமீறலும் அரச பயங்கரவாதமும்

எவ்வித முன் அறிவிப்போ, பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் தரப்பு நியாயங்களை முறையீடு செய்வதற்கான கால அவகாசமோ கொடுக்காமல், எந்தச் சட்ட வழிமுறைகளையும் பின்பற்றாமல் அந்த வீடு புல்டோசர் மூலம் இடித்துத் தள்ளப்பட்டுள்ளது. மொத்தத்தில், ஒரு மதம் சார்ந்த பிரச்சனையை காரணமாகக் காட்டி, அதில் சம்பந்தப்பட்ட இஸ்லாமிய குடும்பத்திற்கு குறுக்கு வழியில் வழங்கப்பட்ட ஓர் அரச பயங்கரவாதத் தண்டனையாகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது. மேலும், இந்தத் தண்டனை ஓர் அப்பாவி இஸ்லாமிய குடும்பத்தை அந்தச் சமூகத்தில் இருந்து ஒட்டுமொத்தமாகத் தனிமைப்படுத்திவிட்டது. சொந்த வீட்டில் இருந்த அவர்கள், இன்று நிரந்தரமற்ற ஒரு வாடகை வீட்டில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

நிர்க்கதியான வாழ்க்கை

யாருடைய தயவையும் எதிர்பாராமல் சொந்தமாகத் தொழில் செய்து வந்த அவர்களது மகன்கள், இன்று, வேண்டுமென்றே பொய்யாகத் தங்கள் மேல் சுமத்தப்பட்டுள்ள களங்கத்தைத் துடைக்க முடியாமல், வேலை தேடி அலைந்துகொண்டிருக்கின்றனர். உறுதியாக இருந்த ஹாலிம், தற்போது இதய பாதிப்புகளுடனும், ரத்த அழுத்தத்துடனும் உடல் நலிவுற்று பாதிக்கப்பட்டுள்ளார்.

“எங்கள் வீட்டை இடித்துத் தரைமட்டமாக்கிய பிறகு, எங்கள் வாழ்க்கை அர்த்தமற்றதாகிப் போனது. யாருக்கும் இது போன்ற நிலைமை வரக்கூடாது” என ஷாமா கண்கலங்கிச் சொன்னார். அவரது வார்த்தைகள் துக்கத்தை மட்டும் சுமந்திருக்கவில்லை; அவரைப் போல மௌனமாகத் துக்கத்தைச் சுமந்துகொண்டிருப்பவர்களின் பிரதிபலிப்பாகவும் இருந்தது. “ஒருவர் மீது குற்றம் சுமத்தினால், அவருக்குத் தன் நிலையை விளக்கக் குறைந்தபட்ச வாய்ப்புகளையாவது கொடுங்கள். அதற்குப் பிறகு அவர் குற்றம் சாட்டப்பட்டவர் என்று நிரூபிக்கப்பட்டால், அப்போது உங்கள் தண்டனைகளை வழங்குங்கள்” என்று கண்ணீர் வடித்தார் ஷாமா.

காலம் கடந்த நீதிமன்றத் தீர்ப்பு

வீட்டை இடித்ததில் எழுந்த தூசியும் சாம்பலும் அடங்கினாலும், அதனால் ஏற்பட்ட வலிகள் ஆறாமல் தொடர்ந்து கொண்டிருந்தது. வீடு இடிக்கப்பட்ட ஒரு வாரம் கழித்து, மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் சாக்ஷி தொடர்ந்த வழக்கில், “சாக்ஷி தன்னுடைய முழுமையான விருப்பத்தின் பேரிலேயே ஆசிப் கானைத் திருமணம் செய்துள்ளார்” என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆசிப்கான் மீது பதியப்பட்ட கடத்தல் வழக்கைத் திரும்பப் பெறுமாறும், சமூகம் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மூலம் வரும் அச்சுறுத்தல்களில் இருந்து காதல் இணையரைப் பாதுகாத்திடுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், அராஜகமான முறையில் வீடுகள் இடிக்கப்பட்டது பற்றியோ, அதில் சம்பந்தப்பட்ட காவல்துறை மற்றும் மாநில அரசு அதிகாரிகளின் சட்டத்திற்குப் புறம்பான தண்டனைக்குரிய நடவடிக்கைகள் பற்றியோ, ஏற்பட்ட இழப்புகளுக்கான இழப்பீடு பற்றியோ எந்த ஒரு வழிகாட்டுதலும் அதில் வழங்கப்படவில்லை. ஷாமா குடும்பத்தைப் பொறுத்தவரை, இந்தத் தீர்ப்பு மிகவும் காலதாமதமாகக் கிடைத்த ஒன்றாகும். ஏனெனில், அது அவர்களின் வீடு, வாழ்வாதாரம், சமூக மரியாதை என்று எதையும் பாதுகாக்கவில்லை. ஷாமா குடும்பத்திற்கு நடந்த நிகழ்வுகள் அனைத்தும் கொடுமையானது மட்டும் அல்ல அவை அநீதியானது என இந்த தீர்ப்பு உலகிற்கு உணர்த்தியது. அதே வேளையில் அதன் பிறகு ஷாமா குடும்பத்தோடு பழகிய அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் முன்பு இருந்ததைப் போல அவர்களோடு நெருக்கமாக இல்லை. இவர்களோடு நெருக்கமாக இருந்தால் தங்களுக்கும் இதே போன்ற நிலமை உருவாகும் என்ற அச்சத்தோடு ஷாமா குடும்பத்திடம் இருந்து பெரும்பாலானவர்கள் விலகியே இருந்தனர்.

இத்தனை கொடுமைகளுக்கும் மத்தியில், மலை உச்சியில் தோன்றிய வெளிச்சமாக ஆசிப் முஜ்தபா என்ற சமூக ஆர்வலர் மூலம் ஷாமா குடும்பத்திற்கு உதவிகள் கிடைத்தன. அவர் “மைல்ஸ் டு ஸ்மைல்” என்ற தொண்டு நிறுவனத்தின் (NGO) மூலம் ஷாமாவின் குடும்பத்திற்கு அத்தியாவசியப் பொருட்களை நிவாரணமாக வழங்கினார். இந்த உதவி, தங்களின் உடனடித் தேவைகளை நிறைவேற்றியதோடு மட்டுமல்லாமல், தங்களின் இருள் சூழ்ந்த துன்ப நேரத்தில் கிடைத்த நேசக்கரம் என்று நன்றியோடு நினைவுகூர்கிறார் ஷாமா.

இதுபோன்ற அராஜகமான முறையில் அப்பாவி இஸ்லாமிய குடும்பத்தினர் வீடுகளை இடித்து வருவது ஒருபோதும் நீதி வழங்கக் கூடியதாக நிகழ்வாக இருப்பதில்லை. இவை குறைந்தபட்ச விசாரணைகள் கூட இன்றி கொடுக்கப்படும் தண்டனையாகவே அமைந்துள்ளன. மேலும் இது போன்ற சம்பவங்கள் மறைமுகமாக மற்றவர்களுக்கும் கொடுக்கப்படும் எச்சரிக்கை செய்தியாகவே பார்க்கப்பட வேண்டியுள்ளது. ஷாமாவின் குடும்பம் எந்தத் தவறும் செய்யாமல் மரண தண்டனைக்கும் மேலான ஒரு கொடிய தண்டனையை அனுபவித்து வருகின்றது.

அராஜகமான முறையில் தங்கள் வீடு இடித்து தள்ளப்பட்டதை எதிர்த்து ஷாமா குடும்பத்தினர் தொடுத்த வழக்கு, இப்போது வரை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. இவ்வழக்கு தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

“ஒரு முடிவற்ற காத்திருப்போடு, என்றாவது ஒருநாள் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம். எங்கள் வாழ்க்கை 20 வருடங்கள் பின்னோக்கிச் சென்றுவிட்டது. இது ரமலான் மாதம். ஆனால், அந்தப் பெருநாளைக் கொண்டாடும் சூழலில் நாங்கள் இல்லை. இந்த மாதம் எங்கள் வாழ்வைத் துக்கத்தால் நிறைத்துவிட்டது” என்று ஏக்கத்தோடு சொல்கிறார் ஷாமா.

இது ஒரு வீட்டின் கதை மட்டுமல்ல

மொத்தத்தில், இது ஒரு வீடு இடிப்பைப் பற்றிய கதை மட்டுமல்ல. மாறாக, இது நீதி மறுக்கப்பட்டு, மொத்த வாழ்வாதாரமும் பறிக்கப்பட்டு, எதிர்காலம் அழிக்கப்பட்டு, துயரம் நிறைந்த வாழ்க்கைப் பக்கங்களை அச்சத்தோடு புரட்டிக்கொண்டிருக்கும் ஒரு குடும்பத்தின் கதை. ஷாமா மற்றும் ஹாலிமைப் போலவே, தங்கள் வாழ்வாதாரத்தை புல்டோசரின் கோரப் பற்களுக்கு இரையாகக் கொடுத்துவிட்டு நிர்க்கதியாய் நிற்கும் பல்வேறு எளிய மனிதர்களைப் பற்றிய கதையும்கூட.

தமிழில்: சிவசங்கர் (Sivasankar)

This piece has been translated by Sivasankar. Read the original in English here.

Join us