இந்தியாவிலும் பாலஸ்தீனத்திலும் அரசே முன்நின்று நடத்தும் புல்டோசர் இடிப்புகளின் ஒற்றுமையும் வேற்றுமையும்

Demolition in Palestine and Kashmir
Image credit: Wikimedia Commons

அறிமுகம்: அரச வன்முறையின் ஆயுதமாக இடிப்புகள்

அரசின் அனுமதியுடன் வீடுகளை இடிப்பது என்பது ஒரு தனித்துவமான, சக்திவாய்ந்த வழிமுறையாகும். இது இஸ்ரேல் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளிலும் மக்களைக் கட்டுக்குள் வைப்பதற்கும் தண்டிப்பதற்குமான ஒரு முறையாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த இரு வெவ்வேறு புவியியல் பகுதிகளில், குறிப்பிட்ட ஒடுக்கப்பட்ட சமூகங்கள் இதன் மூலம் குறிவைக்கப்படுகிறார்கள். வரலாற்று ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் இந்த நாடுகள் மிகவும் வேறுபட்ட சூழல்களில் செயல்பட்டாலும், இரண்டுமே இத்தகைய இடிப்பு நடவடிக்கைகளை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துகின்றன. ஒரு குறிப்பிட்ட சமூகக் குழுவைச் சேர்ந்தவர்கள் ‘மற்றவர்கள்’ (அந்நியர்கள்) என்று அடையாளப்படுத்தி, அவர்களுக்கு எதிராக இந்த ஆயுதம் பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக, இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பாலஸ்தீனப் பகுதிகளில் உள்ள பாலஸ்தீனர்கள், மற்றும் இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் இவ்வாறு இலக்காக்கப்படுகிறார்கள். இந்த இடிப்புகள், அரசின் கட்டுப்பாட்டை வெளிப்படுத்தும் விதமாக அமைகின்றன. இவற்றை நியாயப்படுத்துவதிலும், செயல்படுத்தும் முறைகளிலும் ஆச்சரியமூட்டும் ஒற்றுமைகள் காணப்படுகின்றன. அதே சமயம், பாலஸ்தீனத்திலும் இந்தியாவிலும் இந்த நடைமுறைகளில் சில வேறுபாடுகளும் உள்ளன. இந்த இரு நாட்டு நடைமுறைகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது அது நமக்குத் தெளிவாகிறது. அதாவது, ஜனநாயகக் கட்டமைப்புகளுக்குள் கூட, கட்டடங்களை இடிப்பது மூலமான வன்முறை எப்படி ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசின் நடைமுறையாக மாறுகிறது என்பதே அது.

இஸ்ரேல்: ஆக்கிரமிப்பும் தொடரும் இடிப்புகளும்

1948ல் இஸ்ரேல் என்கிற நாடு உருவாக்கப்பட்டபோது, ஆண்டாண்டு காலமாக இருந்துவந்த பாலஸ்தீனத்தில் வாழ்ந்த பாதிக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் இருப்பிடங்களிலிருந்து விரட்டப்பட்டனர். 7,50,000க்கும் அதிகமான மக்கள், பின்னர் இஸ்ரேல் என்று அழைக்கப்பட்ட பகுதியிலிருந்து மேற்குக் கரை, காசா, எகிப்து, ஜோர்டான், லெபனான், சிரியா ஆகிய இடங்களுக்கு விரட்டப்பட்டனர். கணிசமான மக்கள், புதிதாக வரையறுக்கப்பட்ட இஸ்ரேலியப் பகுதிக்குள்ளேயே உள்நாட்டில் இடம்பெயர்ந்தனர். இவ்வாறு இடம்பெயர்ந்த மக்கள் திரும்பி வருவதைத் தடுப்பதற்காக, அவர்களுடைய தனிப்பட்ட மற்றும் பொது சொத்துக்கள் இஸ்ரேலிய அரசு அமைப்புகளால் அழிக்கப்பட்டன அல்லது புதிய யூத உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டன. இப்படியாக, சொத்துக்களைப் பறித்தல், இடம்பெயரச் செய்தல் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் (கெட்டோக்களில்) வாழ வைக்கும் ஒரு திட்டமிட்ட செயல்முறை தொடங்கியது. இது பல ஆண்டுகளுக்குத் தொடர்ந்தது. 1967 அரபு-இஸ்ரேல் போரின் விளைவாக, இஸ்ரேல் அனைத்து பாலஸ்தீனப் பகுதிகளையும் ஆக்கிரமித்தபோது, இந்த செயல்முறை குறிப்பாக வேகம் பிடித்தது. பல ஆண்டுகளாக, பாலஸ்தீன நகரங்கள், கிராமங்கள், பண்ணைகள் மற்றும் வீடுகளை இடிப்பது என்பது இஸ்ரேலின் சியோனிசத் திட்டத்தின் ஒரு நிரந்தர அம்சமாக மாறியது. பாலஸ்தீன நிலங்களிலிருந்து அரபு மக்களை அகற்றி, அவற்றை யூதமயமாக்குவதே இதன் நோக்கமாக இருந்தது.

இந்தியா: பழைய மற்றும் புதிய இடிப்பு வடிவங்கள்

இந்தியாவிலும், அரசால் அனுமதிக்கப்பட்ட சொத்துக்களை இடிக்கும் செயல்பாடு ஒரு பழமையான வழிமுறைதான். இது முக்கியமாக நகர்ப்புறங்களில் உள்ள குடிசைப்பகுதி வாழ் மக்கள் மற்றும் மலைகளிலும் காடுகளிலும் வசிக்கும் பழங்குடியினரான ஆதிவாசிகளுக்கு எதிராகவே இயக்கப்பட்டு வந்துள்ளது. வளர்ச்சித் திட்டங்களின் ஒரு பகுதியாகவோ அல்லது அரசு நில ஆக்கிரமிப்பைக் காரணம் காட்டியோ நியாயப்படுத்தப்படும் இத்தகைய இடிப்புகள் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

இருப்பினும், சமீபத்திய ஆண்டுகளில், தண்டனை வழங்கும் நோக்கில் அரசு நடத்தும் புல்டோசர் இடிப்புகள் அதிவேகமாக அதிகரித்துள்ளன. ஏதேனும் குற்றங்களைச் செய்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டவர்களுக்கு தண்டனையாகவோ அல்லது அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடுபவர்களுக்கு எதிராகவோ அரசு அமைப்புகள் இந்த புல்டோசர் இடிப்புகளை மேற்கொள்கின்றன. பன்னாட்டு மன்னிப்பு அவை (அம்னெஸ்டி இன்டர்நேஷனல்) போன்ற மனித உரிமை அமைப்புகள், இந்தத் ‘தண்டனை இடிப்புகள்’ நாட்டின் மிகப்பெரிய மத சிறுபான்மையினரான முஸ்லிம்களுக்கு எதிராகவே செயல்படுத்தப்படுவதாக சுட்டிக்காட்டுகின்றன. முரண்பாடாக, இந்திய ஊடகங்களால் “புல்டோசர் நீதி” என்று பெயரிடப்பட்ட, அரசியல் உள்நோக்கம் கொண்ட இந்தக் கட்டட இடிப்புகள், வலதுசாரி பாரதிய ஜனதா கட்சி அரசாங்கங்களால் மத்திய மற்றும் மாநில அளவிலும் பிரபலப்படுத்தப்பட்டுள்ளன.

“புல்டோசர் நீதி”யும் ஒப்பீட்டு ஆய்வின் தேவையும்

“புல்டோசர் நீதி” என்பது நாட்டின் தொலைக்காட்சி, அச்சு மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. குடிமைச் சமூகக் குழுக்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் நீதிமன்றங்கள் கூட இந்த இடிப்புகளை தன்னிச்சையானவை, பாகுபாடானவை மற்றும் சட்டவிரோதமானவை என்று கூறியுள்ளன. ஷிவாங்கி மரியம் ராஜ் மற்றும் சோம்தீப் சென் போன்ற எழுத்தாளர்கள், இந்தியாவில் ஆயுதமாகப் பயன்படுத்தப்படும் இந்த இடிப்புகள், பாலஸ்தீனிய நிலம், கட்டிடங்கள் மற்றும் மக்களுக்கு இஸ்ரேல் அளிக்கும் அணுகுமுறையால் சிறிதளவேனும் தூண்டப்பட்டிருக்கலாம் என்று வாதிட்டுள்ளனர். இஸ்ரேலிய மற்றும் இந்திய அரசுகளால் மேற்கொள்ளப்படும் இடிப்புகளின் வரலாற்றுச் சூழலும் அளவும் பெரிதும் வேறுபட்டிருந்தாலும், குறிப்பிட்ட சமூகங்களைக் குறிவைத்து நடத்தப்படும் பாகுபாடான இடிப்புகளின் ஒரே தன்மையானது என்பதால் அதுகுறித்த ஒரு ஒப்பீட்டை அவசியமாக்குகிறது. குறிப்பாக, இடிப்புகள் குறித்த அரசின் சொல்லாடல்கள் மற்றும் இந்த மீறல்களுக்குப் பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்வினைகள் ஆகிய இரண்டு தளங்களில் இந்த ஒப்பீடு தேவைப்படுகிறது.

Demolition
(2000 முதல் 2005 வரையிலான பாலஸ்தீனர்களின் இரண்டாவது எழுச்சியின்போது, பாலஸ்தீன கட்டமைப்புகள் மீது இஸ்ரேலிய நிர்வாகம் பெருமளவிலான தண்டனை இடிப்புகளை மேற்கொண்டது)

இடிப்புகளுக்கான இஸ்ரேலின் நியாயப்படுத்தல்கள்

பொதுவாக, பாலஸ்தீனக் கட்டமைப்புகளை இடிப்பதையும், சட்டவிரோதக் குடியிருப்புகள் மற்றும் புறக்காவல் நிலையங்களை அமைப்பதையும் மூன்று வழிகளில் நியாயப்படுத்த இஸ்ரேலிய அதிகாரிகள் முயற்சி செய்கின்றனர். முதலாவதாக, ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளில் உள்ள பாலஸ்தீனர்களின் சொத்துக்களை ‘முறையான கட்டிட அனுமதி இல்லை’ என்ற பெயரில் குறிவைக்கின்றனர். குறிப்பாக ஜெருசலேம், துல்கார்ம், ஹெப்ரான் ஆகிய பகுதிகளில் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் விளைவாக வளர்ச்சியை முன்னிறுத்திய வெளியேற்றங்கள் அதிகரிக்கின்றன.

தண்டனை இடிப்புகளும் சட்டப் பின்னணியும்

சட்டம்-ஒழுங்கு அமலாக்கத்திற்குட்பட்ட ஒரு நடவடிக்கை என தண்டனைக்குரிய இடிப்புகளை இஸ்ரேல் நியாயப்படுத்துகிறது. 2005 முதல் 2014-க்கு இடையில் குறுகிய சிலகாலம் மட்டுமே இடிப்பு நடவடிக்கைகளை நிறுத்தி வைத்திருந்தது. அக்காலகட்டத்தைத் தவிர, இத்தகைய இடிப்பு நடவடிக்கையை அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ கொள்கையாக நீதிமன்றமே பலமுறை அங்கீகரித்து வந்திருக்கிறது. 1945-இல் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் பாலஸ்தீனம் இருந்த இறுதிக் காலங்களில் பிறப்பிக்கப்பட்ட ஒரு அவசரச் சட்டத்தின் விளைவாகவே ஆரம்பத்தில் இதுபோன்ற பாலஸ்தீனக் கட்டமைப்புகளை இடித்தழிக்கும் செயல் நடந்தேறியது. ‘எதிரிகள் தாக்கக்கூடும்’ என இஸ்ரேலிய இராணுவம் சந்தேகப்படக்கூடிய வீடுகளையும் நிலங்களையும் அழிப்பதற்கு அதே சட்டம் அனுமதி அளித்தது. இதையொத்த நடவடிக்கைகளை இஸ்ரேலிய நிர்வாகம் இப்போது மறு உருவாக்கம் செய்கிறது. தண்டனையாக வீடுகளை இடிப்பதையும், ஆபத்தான கட்டிடங்கள் என்று கூறியும் அழிப்பதையும் இன்றுவரை இஸ்ரேல் தொடர்கிறது.

இடிப்பு நடவடிக்கைகளின் பரிமாணமும் உதாரணங்களும்

உதாரணமாக, பாலஸ்தீனர்களின் இரண்டாவது எழுச்சியின்போது, பாலஸ்தீன கட்டமைப்புகள் மீது இஸ்ரேலிய நிர்வாகம் பெருமளவிலான தண்டனை இடிப்புகளை மேற்கொண்டது. (2000-2005 காலகட்டங்களில் பாலஸ்தீனத்தில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு எதிராக பாலஸ்தீனர்கள் வெகுண்டெழுந்த நிகழ்ச்சி இரண்டாவது எழுச்சி எனப்படுகிறது) ஜெருசலேமில் இயங்கும் பி’ட்ஸெலெம் (B’Tselem) என்கிற ஒரு மனித உரிமை அமைப்பு செயல்பட்டு வருகிறது. ஹீப்ரு மொழிச் சொல்லான இது “கடவுளின் சாயல்” என்னும் பொருள் கொண்ட பெயர் அது. இஸ்ரேலிய வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள், பத்திரிகையாளர்கள், இஸ்ரேலிய பாராளுமன்ற உறுப்பினர்களால் நிறுவப்பட்ட மனித உரிமைகள் அமைப்பு. ‘உள்ளார்ந்த நேர்மை’ மற்றும் ‘அனைத்து மக்களுக்கான சமத்துவம்’ ஆகியவற்றைத் தனது அடிப்படைக் கோட்பாக அந்த அமைப்பு வைத்துள்ளது. அந்த அமைப்பின் கூற்றுப்படி, இக்காலகட்டத்தில் சற்றேறக்குறைய ஆயிரம் பாலஸ்தீனர்களின் வீடுகள் அரசு நிர்வாகத்தால் சட்டவிரோதமானவை என்று கருதப்பட்டு இடிக்கப்பட்டன. சட்டப்பூர்வமாக அனுமதி பெறாமல் கட்டப்பட்டவை என்பதே அதற்கான காரணமாகக் கூறப்பட்டது. 

இக்காலகட்டத்தில், பாலஸ்தீனர்களின் 628 வீடுகள் ‘கூட்டுத் தண்டனையாக’ மொத்தமாக அழிக்கப்பட்டன. பயங்கரவாதம் எனக் கருதும் செயல்களில் ஈடுபட்டவர்கள் எனக் கூறி, சில குறிப்பிட்ட வீடுகளைக் குறிவைத்து இஸ்ரேல் இதனை செய்திருக்கிறது. இது புல்டோசர் இடிப்புகளை நியாயப்படுத்து இரண்டாவது வழிமுறையாகும். இவ்வாறு பாலஸ்தீனர்களின் ஆவணங்களின் சட்டபூர்வ தன்மையைக் கேள்விக்குள்ளாக்குவதன் மூலம் அவர்களின் கட்டமைப்புகள் சட்டவிரோதமாக்கப்பட்டன; அல்லது இஸ்ரேல் மற்றும் அதன் குடிமக்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்டவர் என்று நிலைநாட்டுவதன் மூலமும் இவ்வாறு செய்யப்பட்டது. இடிப்பிற்கான மூன்றாவது நியாயப்படுத்தலாகப் பாதுகாப்புக் காரணங்களை இஸ்ரேல் முன்வைக்கிறது. சாலை மற்றும் யூதக்குடியிருப்புகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் இராணுவத் தேவைகளுக்காக இடித்தழிப்பை மேற்கொள்கிறது. இஸ்ரேலிய அரசிற்கும் அதன் மக்களுக்கும் சிறந்த பாதுகாப்பை வழங்கும் நோக்கத்திற்காக இதைச் செய்வதாக இஸ்ரேல் கூறிக்கொள்கிறது.

இந்தியாவில் இடிப்புகளுக்கான நியாயப்படுத்தல்கள்

இஸ்ரேலில் இதுபோன்ற தண்டனை இடிப்புகளெல்லாம் அந்நாட்டு அரசின் கொள்கையின் ஒரு பகுதியாக இருந்தபோதிலும், இந்தியாவில் இதுநாள்வரை அத்தகைய நடவடிக்கைகள் ‘ஆக்கிரமிப்பு எதிர்ப்பு நடவடிக்கை’ என்ற போர்வையிலேயே மேற்கொள்ளப்படுகின்றன. இந்தியாவில் உள்ள ஆட்சியாளர்கள், இதனை இரண்டு விதமாக நியாயப்படுத்த முயற்சி செய்கின்றனர். 

ஒன்று, அதிகாரபூர்வ நியாயப்படுத்துதல்; இத்தகைய இடிப்பு நடவடிக்கைகளின் சட்டபூர்வத்தன்மை குறித்து கேள்வி எழும்போது, ஆவணப்படுத்தப்பட்ட பதிவுகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதாகும். 

மற்றொன்று, பொதுவெளியில் நியாயப்படுத்துதல் (popular justification); பொதுப் பேரணிகளில் வாய்மொழி வழியாக முழக்கம் எழுப்புதல், மேடைப்பேச்சுகளில், அல்லது சமூக ஊடகங்களில் குறிப்பிட்ட வகையில் இயங்குவதன் வழியாகப் பொதுமக்களிடம் கருத்தைத் திணிப்பது என இந்த நியாயப்படுத்தல் நடக்கிறது. இஸ்லாமியர்களுக்குச் சொந்தமான சொத்துக்களை இடிக்கும் நடைமுறைக்குப் பொதுமக்களின் ஆதரவைப் பெறுவதற்காக இது செய்யப்படுகிறது.

இந்தியாவில் ‘தண்டனை இடிப்பு’ என்பது பொதுவாக வகுப்புவாத வன்முறைகள் அல்லது போராட்டங்களைத் தொடர்ந்தே நிகழ்கின்றன. இந்த விவகாரங்களில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும்வரை காத்திராமல் குற்றஞ்சாட்டப்பட்டவர்களைத் தண்டிக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளன. செயற்பாட்டாளர்கள், போராட்டக்காரர்கள், அரசை விமர்சிப்பவர்களுக்கு எதிராகத் தண்டனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுகுறித்து பொதுவெளியில் கேள்வி எழுப்பினால், அதிகாரிகள் இந்த இடிப்பிற்குப் பின்னால் நகர்ப்புற மேம்பாடு, நகரை அழகுபடுத்தும் திட்டம் அல்லது சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் ஆகியவையே காரணங்கள் என மேற்கோள் காட்டுகின்றனர். இருப்பினும், தண்டனை நியாயப்படுத்தல் முக்கியமாகப் பொதுமக்களிடம் ஆதரவைப் பெற முயற்சிக்கிறது; அதே நேரத்தில் அதிகாரத்துவ நியாயப்படுத்தல் நீதிமன்றங்களை அமைதிப்படுத்த முயற்சி செய்கிறது. இஸ்லாமியர்களின் வீடுகள் தண்டனை இடிப்புக்குள்ளாகும் செய்திகளில் உத்தரப் பிரதேச அரசு அடிக்கடி இடம்பெற்றாலும், அது நீதிமன்றத்தின் முன் எந்தவொரு குறிப்பிட்ட சமூகத்தின் மக்களையும் குறிவைத்தோ, அல்லது பழிவாங்கும் நோக்கிலோ இடிப்பு நடவடிக்கைகள் செய்யப்படவில்லை என மறுத்துள்ளது. இடிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் இந்த இரண்டு வகையிலான நியாயப்படுத்தல்களும் கைகோர்த்துச் செயல்படுகின்றன.

பாலஸ்தீனத்தில் நீதித்துறை எதிர்வினையும் அதன் தாக்கமும்

இடிப்புகளைச் சந்தித்த பாலஸ்தீனர்களின் நியாயத்திற்கான நீதிமன்ற நடவடிக்கைகள் பெரும்பாலும் பயனற்றவையாகவே இருந்தன. 1967-ஆம் ஆண்டு நடந்த போரில் மேற்குக் கரை, காசா, ஜெருசலேம் ஆகியவற்றை இஸ்ரேல் கைப்பற்றியது. அதன்பிறகு 1970-களில் இஸ்ரேலிய நீதிமன்றம், வலுக்கட்டாயமாக வெளியேற்றுதல், பாலஸ்தீனர்களின் சொத்துக்களை இடித்தல் தொடர்பான வழக்குகளை எடுத்து விசாரிக்க ஆரம்பித்தது. இஸ்ரேலிய நீதிமன்றங்கள் ஆரம்ப கட்டத்தில், பெரும்பாலும் அரசின் நில அபகரிப்பு நடவடிக்கைகளுக்கு உதவும் சட்டப்பூர்வக் கருவியாகவே செயல்பட்டன. எப்போதாவது அரிதாகத்தான் அவை இராணுவம் மற்றும் சட்டவிரோத யூதக் குடியேறிகளின் செயல்பாடுகளுக்கு எதிரான ஆணைகளைப் பிறப்பித்தன. 1979-இல் நடந்த எலான் மோரே வழக்கு, இத்தகைய விதிவிலக்குக்கு ஓர் எடுத்துக்காட்டு. ‘இஸ்ரேலிய இராணுவத்தால் உத்தரவிடப்பட்ட நில கையகப்படுத்துதல் சட்டவிரோதமானது’ என்று அப்போது நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன் விளைவாக, பறிமுதல் செய்யப்பட்ட நிலத்தில் கட்டப்பட்டிருந்த குடியிருப்பு காலி செய்யப்பட்டு அகற்றப்பட வேண்டியிருந்தது. இருப்பினும் இத்தகைய வழக்குகள் அரிதானவை. மேலும் இது ஆக்கிரமிப்பின் மீது ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி என்ற வண்ணத்தைப் பூசுவதன் மூலம் இஸ்ரேலிய அரசின் மற்ற அனைத்து நடவடிக்கைகளையும் நியாயப்படுத்துவதற்கே பயன்படுத்தப்பட்டன.

டெல்-அவிவ்வைச் சேர்ந்த ரோனன் சமீர் ஒரு சட்டநிபுணர். ‘சட்டம் மற்றும் சமூக மதிப்பாய்வு’ (Law and Society Review) என்னும் இதழில் ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டார். அதில் அவர்,
“எலான் மோரே வழக்கைத் தொடர்ந்து இதுபோன்ற விஷயங்களில் ‘பாதுகாப்புக் காரணங்கள்’ மற்றும் ‘இராணுவத்தின் அவசியத் தேவைகள்’ ஆகியவற்றின் வரம்புகளை நீதிமன்றம் விரிவுபடுத்தியது. இது இஸ்ரேலிய அரசின் இடிப்புக் கொள்கைகளுக்கு நியாயப்படுத்தலை வழங்கியது”
எனக் குறிப்பிடுகிறார்.

 

எலான் மோரே வழக்கிற்குப் பிறகு பாலஸ்தீனர்களின் மனுக்கள் குறிப்பிடத்தக்க வகையில் குறைந்துவிட்டதாகவும், தாக்கல் செய்யப்பட்ட சில மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் ரோனன் சமீர் குறிப்பிடுகிறார். தங்கள் வீட்டை இடிக்க முன்மொழியப்பட்டதற்கு எதிராக பாலஸ்தீனர்கள் மனு தாக்கல் செய்தாலும் நீதிமன்றம் அதை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நிகழ்வுகள் மிகக் குறைவு. 1967 மற்றும் 1986 ஆண்டுகளுக்கு இடையில் இஸ்ரேலிய நீதிமன்றத்தில் 557 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இம்மனுக்கள் நிலம் மற்றும் சொத்துக்கள் பறிமுதல் தொடர்பாகவும், இவற்றுடன் சேர்த்து வரிவிதிப்பு, பணி அனுமதி, தடுப்புக்காவல் போன்றவை தொடர்பாகவும் இருந்தன. இந்த 557 வழக்குகளில் 65 மட்டுமே வழக்கின் தீர்ப்பை நோக்கிய இறுதிக்கட்டத்தை எட்டின. 5 வழக்குகளில் மட்டுமே மனுதாரர்களின் வாதங்கள் உறுதிசெய்யப்பட்டன.

இந்தியாவில் நீதித்துறை தலையீடுகளும் அதன் வரம்புகளும்

மறுபக்கத்தில், இடிப்பிற்கான அதிகார வர்க்கத்தின் நியாயப்படுத்தலை பல முறை இந்திய நீதிமன்றங்கள் நிராகரித்துள்ளன. இதன் பின்னால் தண்டனை தரும் நோக்கம் இருப்பதாக நீதிமன்றங்கள் கருதுகின்றன. ஒரு காவல் நிலையத்தை எரித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஐந்து பேரின் சொத்துக்கள் புல்டோசரால் இடிக்கப்பட்டன. 2022 ஜூலையில், குவஹாத்தி உயர்நீதிமன்றம், தானாக முன்வந்து அந்த வழக்கை எடுத்துக்கொண்டது. இந்த வழக்கில் உயர் நீதிமன்ற அமர்வு, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க பாஜக தலைமையிலான அரசுக்கு உத்தரவிட்டது. இதேபோன்று, ஆகஸ்ட் 2022-இல், டெல்லி உயர்நீதிமன்றம், டெல்லி மேம்பாட்டு ஆணையத்தைக் கண்டித்தது. டெல்லி மேம்பாட்டு ஆணையம் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு நடவடிக்கைகளில் மேற்கொள்ள வேண்டிய முறையான வழிமுறைகளைப் பின்பற்றவில்லை. புல்டோசரை எடுத்துக்கொண்டு மக்களின் வீட்டுவாசலில் வந்து நிற்பதற்கு முன்னால், கொடுக்க வேண்டிய எச்சரிக்கை அறிவிப்பையும் அது வழங்கிடவில்லை.

பாஜக தலைமையிலான மாநில அரசுகளின் இஸ்லாமிய விரோதப் போக்கு மிகவும் வெளிப்படையாக இருந்ததால், 2023 ஆம் ஆண்டு ஹரியானா உயர் நீதிமன்றம், “கலவரத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டத்தில் பாரபட்சமான இடிப்புகளை நடத்துவதன் மூலம், அவர்கள் இன அழிப்பு நடைமுறையில் ஈடுபடுகிறார்களா?” என்று மாநில அதிகாரிகளிடம் கேட்க வேண்டியிருந்தது.

இருப்பினும், இந்த நீதித்துறை தலையீடுகள் எல்லாம் வழக்கமாக இடிப்பு நடந்த பின்னரே நிகழ்கின்றன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அவை ஒருபோதும் தவறிழைத்த அதிகாரிகள் மீது வழக்கை முன்னெடுத்ததில்லை. பெரும்பாலான வழக்குகளில் சிதைவடைந்த வீடுகளின் தனிநபருக்கோ அல்லது குடும்பத்திற்கோ இழப்பீட்டுத்தொகை வழங்க உத்தரவிடுவதில்லை. முடிவில், இந்திய நீதித்துறை பெரும்பாலும் கடுமையான கண்டனங்களையே தெரிவிக்கிறது; ஆனால் அரிதாகவே அதைத் தாண்டிய நடவடிக்கைகளைத் தொடர அனுமதிக்கிறது. கடந்த வருடம் உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஒன்று சட்டத்திற்குப் புறம்பான இடிப்புகளைக் கடுமையாகக் கண்டித்து, அதைச் சட்டவிரோதமான கூட்டுத்தண்டனை என்று கூறியதுடன், அதைத் தடுப்பதற்கான விரிவான வழிகாட்டுதல்களை வழங்கிய பிறகும் கூட, மாநில அரசுகள் வழமையான நடைமுறைகளையே தொடர்கின்றன.

Demolition in Kahsmir
(இடிப்பிற்கான அதிகார வர்க்கத்தின் நியாயப்படுத்தலை பல முறை இந்திய நீதிமன்றங்கள் நிராகரித்துள்ளன. இதன் பின்னால் தண்டனை தரும் நோக்கம் இருப்பதாக நீதிமன்றங்கள் கருதுகின்றன)

கூறப்பட்ட காரணங்களுக்கு அப்பால்: பாலஸ்தீன யதார்த்தம்

பாலஸ்தீனத்திலும் இந்தியாவிலும் அரசு அனுமதிக்கும் இடிப்புகளில் உள்ள அம்சங்கள், அரசு வழங்கும் நியாயப்படுத்தல்களினால் முழுமையாக விளக்க முடிவதில்லை. உதாரணமாக, பாலஸ்தீனத்தில் வெளியேற்றம் மற்றும் அழிப்பு நடவடிக்கைகளின் வரம்பு என்பது குடியிருப்புப் பகுதிகளோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. ஆலிவ் மற்றும் கிச்சிலி எனப்படும் எலுமிச்சை வகைப் பழத்தோட்டங்களை அழிப்பது, நீர்ப்பாசனக்குழாய்களைத் தோண்டி எடுப்பது, பயிர்களை நாசம் செய்வது போன்ற நடவடிக்கைகளில் இஸ்ரேலிய அதிகாரிகள் ஈடுபடுகின்றனர். ஏற்கனவே மேற்குக் கரையில் உள்ள பாதி அளவிலான பயிரிடக்கூடிய விளைநிலங்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இவற்றுள் பாதி விளைநிலங்கள் நல்ல நீர் நிலைகளும், கிணறுகளும் உள்ளவை. இந்த நடவடிக்கைகளையெல்லாம் பாதுகாப்புக் காரணங்கள் என்றோ, நிர்வாக அல்லது வளர்ச்சி சார்ந்தது போன்ற காரணங்களைக் கூறியோ விளக்குவது கடினமானது. பாலஸ்தீன கிராமங்கள் மற்றும் நகரங்களில் நிலவும் வாழ்க்கையை முற்றிலுமாக அழித்தொழித்து, அரபு வரலாற்றிலிருந்து அதன் நிலத்தோற்றத்தை அகற்றுவதே அவர்களின் இலக்காக இருக்கிறது.

இந்தியாவில் சொல்லப்படாத நோக்கங்கள்

இந்தியாவில் புதிய வகை இடிப்புகளைப் பொறுத்தவரை, நில ஆக்கிரமிப்பு, கட்டிட அனுமதியில்லாமை என்று வெளிப்படையாகச் சொல்லப்பட்ட காரணங்களைத் தாண்டிச் சொல்லப்படாத காரணங்கள் இருப்பதாகத் தோன்றுகிறது. வகுப்புவாத வன்முறை மற்றும் அரசுக்கு எதிரான போராட்டங்களுக்கான தண்டனை என்கிற வகையான நியாயப்படுத்தலிலும்கூட இது ஒரு மெல்லிய முகமூடியாக இருக்கக்கூடும். இந்தியாவின் ஐந்து மாநிலங்களில் சட்டத்திற்குப் புறம்பான இடிப்புகள் குறித்து ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் என்னும் அமைப்பு ஆவணப்படுத்திய ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இந்த இடிப்புகள், வகுப்புவாத வன்முறை அல்லது போராட்டங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் தனிநபர்களை மட்டும் குறிவைக்கவில்லை, மாறாகப் பரந்த அளவில் இஸ்லாமிய சமூகத்தை நோக்கியே குறிவைக்கப்பட்டன என அந்த ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. இஸ்லாமியர்களின் வணிகங்கள், சொத்துக்கள் மற்றும் வழிபாட்டு இடங்களையே அவர்கள் குறிவைத்தனர். இந்த இடிப்பு நடவடிக்கைகள் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இடங்களில் மேற்கொள்ளப்பட்டன. பல்வேறு சமூகங்கள் வசிக்கும் இடங்களில் உள்ள இஸ்லாமியர்களின் சொத்துக்களும் குறிவைக்கப்பட்டன. இடிப்புகளை நியாயப்படுத்தும் அதிகாரவர்க்கத்தின் கருத்துக்களை இந்திய உயர்நீதிமன்றங்கள் பலமுறை நிராகரித்துள்ளன. இந்த இடிப்புகளுக்குப் பின்னால் தண்டனை தரும் நோக்கம் இருப்பதாக அவை கருதுகின்றன.

குறிவைக்கப்பட்ட சமூகங்களின் எதிர்வினை:

இந்தியா மற்றும் பாலஸ்தீனத்தில் இடிப்புகள் குறித்து அவ்விரு நாட்டு அரசுகள் முன்வைக்கும் தர்க்கத்திலும் சொல்லாட்சிகளிலும் திட்டவட்டமான ஒற்றுமைகள் இருந்தாலும், பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்வினைகள் ஒன்றுக்கொன்று பெருமளவில் வேறுபடுவதாகத் தெரிகிறது.

சுமூத்: பாலஸ்தீனர்களின் அறவழிப் போராட்டம்

பாலஸ்தீனர்கள் தங்களுக்கு நிகழ்த்தப்படும் அநீதிகளுக்கு எதிரான எதிர்ப்பை சுமூத் (Sumud) என்னும் தங்கள் பண்பாட்டுக் கருத்தியல் மூலம் வெளிப்படுத்துகின்றனர். 1967 பாலஸ்தீன ஆக்கிரமிப்புக்குப் பிறகு, வன்முறைக் கிளர்ச்சிக்கும் செயலற்ற நிலைக்கும் இடையிலான ஒரு நடுப்பாதையாக வகுக்கப்பட்ட சுமூத் என்பது, சிரமங்கள் மற்றும் நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியிலும் ஒருவர் தனது நிலத்தில் நிலைத்திருப்பதற்கான உறுதியைக் குறிக்கும் ஒரு வன்முறையற்ற எதிர்ப்பு வடிவமாகும்.

பாலஸ்தீனப் பகுதிகளில் இடிப்பு அல்லது அது தொடர்பான அச்சுறுத்தல்கள் என்பது அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருப்பதால், சுமூத் என்கிற போராட்ட வடிவம் பல வழிகளில் வெளிப்படுகிறது. இடிப்பு ஆணை வழங்கப்பட்ட பிறகும் வீடுகளில் இருந்து வெளியேற மறுப்பது, அழிக்கப்பட்ட உடைமைகளை மீண்டும் அதே இடத்தில் மறுகட்டுமானம் செய்வது, அல்லது முடிந்தவரை அதன் அருகிலேயே மறுகட்டுமானம் செய்வது என்று எதிர்ப்பைக் காட்டுகிறார்கள். சர்வதேச அளவில் பாலஸ்தீனப் பிரதேசமாக அங்கீகரிக்கப்பட்ட பகுதிகளில், கட்டிட அனுமதி பெறுவது கிட்டத்தட்டச் சாத்தியமற்றது. குறிப்பாக மேற்குக் கரை ‘சி’ பகுதி மற்றும் கிழக்கு ஜெருசலேம் பகுதிகளில் இஸ்ரேலிய அதிகாரிகளின் அதிகாரப்பூர்வ அனுமதியின்றி புதிய கட்டமைப்புகளைக் கட்டவோ அல்லது ஏற்கனவே உள்ள கட்டமைப்புகளுக்கு அங்கீகரிக்கப்படாத விரிவாக்கத்தைச் செய்யவோ கட்டாயத்திற்குள்ளாகின்றனர். 

உரிமம் வழியாகக் கட்டுப்பாட்டில் வைக்கும் இந்த ஆட்சியுடைய கெடுபிடியின் கீழ் பாலஸ்தீனர்கள் செயல்பட வேண்டிய சூழ்நிலையை ஒரு உதாரணத்தின் மூலமாகப் புரிந்துகொள்ள முடியும்: 

2010 முதல் 2012 வரை பாலஸ்தீனர்களால் திட்ட அனுமதிக்காகக் கொடுக்கப்பட்ட 3750 கோரிக்கைகளில் 94% கோரிக்கைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இவ்வாறு பாலஸ்தீனர்களால் கட்டப்படும் அல்லது விரிவாக்கம் செய்யப்படும் கட்டிட அமைப்புகள் பெரும்பாலும் இயல்பாகவே சட்டவிரோதமாகி விடுகின்றன. இதனால் இவை அரசு அனுமதிக்கும் இடிப்பிற்கு பாதிக்கப்படக்கூடிய சாத்தியக்கூறுக்கு உள்ளாகின்றன. மேலும் பாலஸ்தீனர்கள் ‘சட்டவிரோத‘ கட்டிடங்களுக்கு நீதிமன்ற அபராதம் செலுத்துவதோடு மட்டுமல்லாமல் இடிப்பு நடவடிக்கை செலவினமாக ஆயிரக்கணக்கான டாலர்களையும் செலுத்த வேண்டும்.

ஒருமுறை கட்டிடம் இடிக்கப்பட்ட பிறகு பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட நிவாரணம் கிடைப்பதற்கு குறைந்தபட்ச சாத்தியக்கூறுகளே உள்ளன. புல்டோசர்கள் எந்நேரமும் திரும்பி வரலாம் என்று தெரிந்திருந்தும் குடியிருப்பாளர்கள் சிதைக்கப்பட்ட வீடுகளை மீண்டும் கட்டி எழுப்புகிறார்கள். பாலஸ்தீனர்களுக்கு நிலத்துடனான உறவே முதன்மையானது; கட்டிடங்களுடனான உறவு இரண்டாம் பட்சமே. இடம் சார்ந்த எதிர்ப்பில், கட்டிட சுமூத் என்பது ஒரு மோதல் நடவடிக்கையாக இருக்கிறது. பாலஸ்தீனர்கள் தங்கள் சொந்த நிலத்தில் கட்டுமானங்கள் கட்டுவதை சட்டவிரோதமாக்கும் அரசின் மேலாதிக்கத்தைச் சவால்விடுக்கிறது. மறுகட்டுமானம் செய்வதை ஒரு எதிர் நடவடிக்கையாகப் பாதிக்கப்பட்ட பாலஸ்தீனர்கள் மட்டும் செய்வதில்லை; பாலஸ்தீன அரசும் அந்நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. 2023 ஜூனில் ரமல்லாவில் பாலஸ்தீன சிறைவாசி இஸ்லாம் ஃபரூக்கின் வீட்டை இஸ்ரேலிய இராணுவம் வெடிவைத்துத் தகர்த்த பிறகு பாலஸ்தீன பிரதமர் முகமது ஷ்தாயே, “ஆக்கிரமிப்பாளர்களால் அழிக்கப்பட்ட எல்லா வீடுகளும் மீண்டும் கட்டித்தரப்படும்” என்று உறுதி அளித்தார். இடம்பெயர்ந்த மக்களுக்கு வீடுகள் உடனடித் தேவையாக இருப்பதால் மறுகட்டுமானத்தின் தேவை தொடர்கிறது. இந்த மறுகட்டுமானத் தேவை, உடனடி அவசியம் என்பதைத் தாண்டி, அரசு அதிகாரிகளுக்கு சவால் விடுவதாகவும் அமைகிறது.

இந்தியாவில் சட்டப் போராட்டங்களும் நம்பிக்கைகளும்

பாரபட்சமான தண்டனை இடிப்புகள் ஒப்பீட்டளவில் இந்தியாவில் புதிய நிகழ்வு என்பதால் பாதிக்கப்பட்ட சமூகத்தின் கூட்டு எதிர்வினையை காலம்தான் கண்டறிய வேண்டும். தற்போது தனிநபர் மட்டத்திலும், கூட்டு மட்டத்திலும் சட்டத்திற்குப் புறம்பான இடிப்புகளில் பாதிக்கப்பட்டவர்கள் நீதித்துறையின் மீது நம்பிக்கை வைத்திருப்பதாகத் தோன்றுகிறது. இடிப்பு ஆணைகளைச் சவால் விடுக்கவும், இடிப்பிற்கான சட்டப்பூர்வ தன்மையைக் கேள்விக்கு உள்ளாக்கவும் போதுமான கால அவகாசம் கிடைத்தால், இடிப்புகளை நிறுத்தி வைக்க முயற்சிக்கின்றனர். தன்னிச்சையான மற்றும் சட்டத்திற்குப் புறம்பான ‘புல்டோசர் நீதி’க்கு எதிராகத் தனிநபர்கள், மத அமைப்புகள், எதிர்க்கட்சியின என பலரும் எடுக்கும் வலுவான நிலைப்பாடாக இது உள்ளது.

ஜமாஅத் உலமா-இ-ஹிந்த் என்பது இந்தியாவில் உள்ள இஸ்லாமிய அறிஞர்கள் அமைப்பு. பல்வேறு உயர் நீதிமன்றங்களிலும் உச்ச நீதிமன்றத்திலும் சட்டத்திற்குப் புறம்பான இடிப்புகளை எதிர்த்து இந்த அமைப்பு முன்னணியில் உள்ளது. 2024 நவம்பரில் இந்த அமைப்பின் மனு ஒன்று உச்சநீதிமன்றம் தண்டனைக்குரிய இடிப்புகளைத் தடை செய்ய வழிவகுத்தது. சட்டத்திற்கு புறம்பான இடிப்புகளால் பாதிக்கப்பட்ட பலர் தனிப்பட்ட முறையில் நிவாரணம் மற்றும் இழப்பீடு வேண்டிக் நீதிமன்றத்தை நாடுகின்றனர். ஆனாலும் இந்த இழப்பீட்டுக் கோரிக்கைகள் மீது உயர்நீதிமன்றங்கள் இன்னும் பல வழக்குகளில் தீர்ப்புகளை வழங்கவில்லை.

நீதித்துறையின் நிலைப்பாடும் எதிர்காலக் கேள்விகளும்

மொத்தத்தில், தண்டனைக்குரிய இடிப்புகளில் நீதித்துறை முன்கூட்டியே தலையிட முடியுமா என்று குறிப்பிடத்தக்க விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், உயர்மட்ட நீதிமன்றங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்து அரசின் அத்துமீறல்களைக் கண்டித்துள்ளன. 

“குற்றம் சாட்டப்பட்ட நபரைத் தண்டிப்பதற்கு இடிப்புதான் தண்டனையாக இருக்கலாம் என்று அரசு தீர்மானிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது” 

என உச்ச நீதிமன்றம் கண்டிக்கிறது. 

“நீதித்துறையின் உள்ளார்ந்த செயல்பாடுகளைச் செயல்படுத்துவதில் நீதித்துறைக்கு மாற்றாக ஒரு நிர்வாகம் இருக்க முடியாது” 

எனவும் நீதிமன்றம் கூறுகிறது. 

உச்சநீதிமன்றத்தின் இத்தகைய தீர்ப்புகள், பாதிக்கப்பட்டவர்களுக்கும், ’புல்டோசர் நீதி’யின் எதிர்ப்பாளர்களுக்கும் கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்பட்டன. மேலும் உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் மற்ற வழக்குகளுக்கு முன்னுதாரணமாகவும், இழப்பீடு வழங்க வழிவகை செய்யவும் இந்தத் தீர்ப்புகள் செயல்படும் என நம்பிக்கை அளித்தன. எனினும், உச்சநீதிமன்றத் தீர்ப்பில் உள்ள போதாமைகளைப் பயன்படுத்திச் சமீபகாலங்களில் சில மாநில அரசுகள் மீண்டும் புல்டோசர் இடிப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன. இதற்கு நீதிமன்றம் எவ்வாறு பதிலளிக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பிலால் அஹ்மத் தந்த்ரே
பிலால் அஹ்மத் தந்த்ரே ஒரு முனைவர்பட்ட ஆய்வாளர். டெல்லியில் கற்பித்தல் உதவியாளராக இருக்கிறார். “பின்காலனிய தெற்காசியாவில் மறைமுக/கண்ணுக்குப் புலனாகாத அரசியல் வன்முறையும், தேசக் கட்டுமானமும்” என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்து வருகிறார்.

தமிழில்: த.பொன்சங்கர் (Ponsankar)

This piece was translated in collaboration with maattru.in. Read the original in English here.

Join us

Bilal Ahmad Tantray is a PhD scholar and Teaching Assistant based in Delhi. His research focuses on indirect/invisible political violence and nation-building in postcolonial South Asia.