
இல்லாது போன வீடு: தௌகீது ஃபாத்திமாவும் அவரது இழந்த வீடும்

தௌகீது ஃபாத்திமா அன்று காலை எப்படித் தயாரானார் என்று அவருக்கு நினைவில்லை. புதிதாகக் கட்டப்பட்ட அவரது வீட்டின் கட்டுமானத் தளத்திற்கு எப்படி விரைந்தார் போன்ற விவரங்கள் அவருக்கு நினைவில்லை. இன்னும் சில தினங்களில் அவர் குடிபுகவிருந்த வீடு அது. அவரது தந்தை தனது செல்ல மகளுக்காக அளவிலாத அன்புடன் தனது வாழ்நாள் சம்பாத்தியத்தை முழுவதும் கொடுத்து எழுப்பிய வீடு அது. அன்றைய தினம் தௌகீது ஃபாத்திமா பேசிய வார்த்தைகளோ, அவரிடமிருந்து பீறிட்ட கூக்குரலோ எதுவும் இப்போது அவருக்கு நினைவில்லை. ஆனால், அவரது நினைவிலிருந்து அகல இயலாத, அவரால் நினைவுகூரக்கூடிய ஒன்று உண்டு. அது அந்த புல்டோசரின் சத்தமும், கதறும் மனிதர்களின் குரல்களும், தன்னை முழுவதுமாக விழுங்கிவிட்ட கையறுநிலையும் ஆகும்.
அவர் குடிபுகவிருந்த அந்த வீட்டில் ஒவ்வொரு கம்பளத்தையும் எங்கே போட வேண்டும் என்றுகூடக் கற்பனை செய்து வைத்திருந்தார். டெல்லி சென்றிருந்தபோது சந்தைகளில் தேடி அலைந்து கவனமாக வீட்டில் வைப்பதற்கான அலங்காரப் பொருட்களைச் சேகரித்திருந்தார். கச்சிதமான ஒளியமைப்பையும் கதகதப்பையும் கொடுக்குமாறு பொருத்தமான விளக்குகளையும் திரைச்சீலைகளையும் மிக நேர்த்தியாகத் தேர்வு செய்திருந்தார். அவர் புதுமனைப் புகுவிழாவை ஒரு பண்டிகையாகக் கொண்டாட விரும்பியிருந்தார். மார்ச் 7, 2023 அன்று அவர் புதுவீட்டிற்குக் குடியேறத் திட்டமிட்டிருந்த நாளில், வாழ்க்கையின் இந்தப் புதிய தொடக்கத்தைக் குர்ஆன்-ஃகானி சடங்குடன் தொடங்க உத்தேசித்திருந்தார். (குர்ஆன்-ஃகானி விருந்து: புதிய தொடக்கங்களைக் குறிக்கும் வகையில் கூட்டாகக் குர்ஆன் ஓதி, பின்னர் ஒன்றாக உணவருந்தும் ஒரு சடங்கு). ஆனால் மாறாக, அதற்கு நான்கு நாட்களுக்கு முன், மார்ச் 3, 2023 அன்று பிரயாக்ராஜ் நகரத்தின் பாம்ரௌலி என்னும் இடத்தில் அவரது புதிதாகக் கட்டப்பட்டிருந்த வீட்டிற்கு புல்டோசர்கள் வந்து சேர்ந்தன. அவர்களது புதிய வீடு சல்லி சல்லியாக இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது.
“வீட்டிலிருந்த எதுவொன்றையும் எடுக்கக்கூட எங்களுக்கு நேரம் தரப்படவில்லை” என்றார் ஃபாத்திமா.
“எல்லாமே புத்தம்புதிய பொருட்கள். எந்த முன்னறிவிப்பும் எங்களுக்கு அளிக்கப்படவில்லை. தொடர்ந்து கேள்வி எழுப்பிக்கொண்டே இருந்தோம். அதன் பின்னர், ஒரே ஒரு ஆணையைக் காண்பித்தார்கள். அதுவும் 10 ஜனவரி 2023 என்ற முன்தேதியிட்டு, முகமது மஷூக்குதின் என்ற நபருக்கு எழுதப்பட்டிருந்தது. அவர் தௌகீது ஃபாத்திமாவின் மாமனார். அந்த ஆணையின் நகலைப் பெறுவதற்காக அவர்களது வழக்கறிஞர் பிரயாக்ராஜ் வளர்ச்சிக் கழகத்தில் RTI (தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் அறியும் மனு) ஒன்றைச் சமர்ப்பித்தார். ஆனால் இன்றுவரை அதற்குப் பதிலில்லை.
அந்த நாளைக் குறித்துக் கேள்வி கேட்கும்போது, ஃபாத்திமாவின் கண்கள் கலங்கியிருந்தன. வார்த்தைகள் வரமறுத்தன. அவரது தந்தை ஜுனாயித் அகமதும் அமைதி காத்தார். அவர்களது துயரத்தைப் பற்றிப் பேசுகையில் வாக்கியங்கள்கூட முழுமையாக அவர்களிடம் இருந்து வரவில்லை. ஆவணங்கள், சட்ட விண்ணப்ப முறையீடுகள், மனுக்கள், உத்தரவு ஆணைகள் ஆகியவற்றின் மொழியில்தான் அவர்களால் பேச முடிந்தது. அவர்கள் இழந்தவற்றின் சுமை, வார்த்தைகளால் தாங்க முடியாத அளவுக்குக் கனமானதாகவும், துயரத்தின் எளிய மொழியில் வெளிப்படுத்த முடியாத அளவுக்கு ஆழமானதாகவும் இருப்பது போலத் தெரிகிறது.
இருபத்தைந்து வயதான ஃபாத்திமா ஒரு மதரஸா பள்ளியில் அடிப்படை உருது மற்றும் அரபிய மொழி கற்பித்து வந்த ஆசிரியர். அவருக்கு ஐந்து மற்றும் இரண்டரை வயதில் இரண்டு மகன்கள். எந்த குற்றச் செயல்களோடும் சம்பந்தப்பட்டவர் அல்ல அவர். சட்டவிரோத செயல்களின் நிழல்கூட தீண்டப்படாதவர். அவருக்கு இருந்ததெல்லாம் ஓர் எளிய பெண்மணியின் கனவு: தனக்கென்று வசிக்க ஒரு வீடு. அந்தக் கனவை நிறைவேற்ற அவரது பெற்றோர்கள் உறுதுணையாக இருந்தார்கள். அதற்கான நிலம் பிரதானி என்று அறியப்படும் அஹ்மத்பூரின் ஊர்த் தலைவரான மஷூக்குதின் என்பவரால் வழங்கப்பட்டது.
அந்த நிலத்தின் மீது, அன்பினாலும், பொருளாதாரத் தியாகங்களாலும் எழுப்பப்பட்டு நின்ற அந்த வீடு, அதிக நாள் நிலைத்திருக்கவில்லை. ஃபாத்திமாவின் பெற்றோர்கள் அவ்வீட்டைக் கட்டுவதற்குத் தனிநபர் கடனையும் பெற்றிருந்தார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் அவர்களது மகளின் எதிர்காலத்தை உறுதிசெய்ய வேண்டும். மகளும் பேரக்குழந்தைகளும் ஒரு நல்ல நிலைக்கு வருவதைக் காண வேண்டும், அவ்வளவே. கனவுகளால் நிறைக்கப்பட்ட அவ்வீடு 2500 சதுரடி நிலத்தில், அரசாங்கத்தால் வகுக்கப்பட்ட எல்லாச் சட்டதிட்டங்களுக்கும் உட்பட்டே கட்டப்பட்டது.
2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கட்டுமானப்பணி தொடங்கப்பட்டபோது பிரயாக்ராஜ் வளர்ச்சிக் கழகத்திலிருந்து, கட்டட வரைபடத்தைக் கேட்டு ஓர் ஆணை வந்திருந்தது. அதை எந்தத் தாமதமுமின்றி ஃபாத்திமா குடும்பத்தினர் உடனே அளித்தனர். பிறகு, ஒரு விளக்கக் கடிதமும் அவர்களிடம் கேட்கப்பட்டது. அதையும் அவர்கள் உரிய ஆவணங்களுடன் சேகரித்துச் சமர்ப்பித்தனர். ஆவணங்கள் சமர்ப்பிப்பு விசாரணையில் ஃபாத்திமாவின் தந்தை பங்கேற்றபோது, ஓர் அதிகாரி அவருக்கு இவ்வாறு உறுதியளித்தார்: “நீங்க போங்க, போய் உங்க வீட்டைப் பெருமையோடு கட்டுங்க” என்றார்.
சுமார் ஓர் ஆண்டுக்கு மேலாகப் பிரயாக்ராஜ் வளர்ச்சிக் கழகத்திலிருந்து வேறெந்த செய்தியும் ஃபாத்திமா குடும்பத்திற்கு வரவில்லை. ஆட்சேபமோ, கட்டுமான வேலையை நிறுத்தக்கோரும் தடை ஆணையோ, அல்லது வேறெந்த புதிய தகவல்களைக் கோரும் கோரிக்கையோ எதுவுமே வரவில்லை. தனது மகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்க உறுதிபூண்ட ஒரு தந்தையின் கவனமான கண்காணிப்பின் கீழ் அவ்வீடு செங்கல் செங்கலாக எழுந்து வந்துகொண்டிருந்தது.
2005ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினராக இருந்த ராஜு பால் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், அக்கொலையை நேரில் பார்த்த முக்கியமான சாட்சியாக இருந்தவர் உமேஷ் பால். 2023 ஆம் ஆண்டு பிப்ரவரியில் அந்தக் கொலைக்கான ஒரே சாட்சியாக இருந்த உமேஷ் கொலைசெய்யப்பட்டார். இந்த இரண்டு கொலைகளையும், ரவுடியும் அரசியல்வாதியுமான அட்டிக் அகமதும் அவரது சகோதரர் அஷ்ரஃப்பும் தான் திட்டமிட்டனர் என்று குற்றம்சாட்டப்பட்டது.
உத்தரப் பிரதேசத்தின் அரசியல் மற்றும் சட்ட அமலாக்கத்துறை வட்டாரங்களில் உமேஷ் பாலின் படுகொலை பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அவதூறுகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. அட்டிக் அகமதுடன் தற்செயலாகச் சம்பந்தப்பட்டவர்களும் சந்தேக வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டார்கள். (ஃபாத்திமாவுக்கு வீடு கட்ட நிலத்தை வழங்கிய கிராமத் தலைவர்) மஷூக்குதின் அட்டிக் அகமதிற்குப் பொருளாதார ரீதியில் உதவியதாகக் குற்றம்சாட்டப்பட்டது. இதை அவர் குடும்பத்தினர் கடுமையாக மறுக்கிறார்கள். அட்டிக் அகமதும் அவர்களும் ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள் என்றாலும், அவர்களின் அரசியல் நிலைப்பாடுகள் வெவ்வேறானவை. அவர்கள் கூட்டாளிகள் என்பதைவிட எதிரிகள் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும் என்கிறார்கள். ஆனால் சட்டத்துக்குப் புறம்பான பழிவாங்கும் கருவியாக புல்டோசர்கள் மாறிவிட்ட ஆதித்யநாத்தின் உத்தரப் பிரதேசத்தில், எந்தவொரு குற்றத்தையும் நிரூபிப்பது அரசின் கடமையல்ல என்றாகிவிட்டது. மாறாக, எந்தக் குற்றத்தையும் செய்யவில்லையென்றாலும் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுவதால் மட்டுமே, எளிய இஸ்லாமியர்களின் மீது முழு குற்றச்சாட்டும் சுமத்தப்படுகிறது.
மார்ச் 3, 2023, அன்று வெள்ளிக்கிழமை. மக்கள் பிரார்த்தனை முடிந்து மசூதியை விட்டு வெளிவரும்போது, அந்தச் செய்தி பரவியது. மூன்று புல்டோசர்கள் ஃபாத்திமாவின் வீட்டை வந்து அடைந்திருந்தன. அவரது தந்தையும், சகோதரரும் அங்கு விரைந்தார்கள். தங்களுக்கு விளக்கமளிக்குமாறு அவர்கள் கெஞ்சியும், வாதாடியும், வேண்டுகோள் விடுத்தும் பார்த்தார்கள். அதிகாரப்பூர்வ ஆணையைக் கேட்டதற்கு ஓர் ஆவணம் அளிக்கப்பட்டது. அது சட்டப்பூர்வ உரிமையாளரான ஃபாத்திமாவுக்கு எழுதப்படாமல், அவரது மாமனாரின் பெயருக்கு எழுதப்பட்டிருந்தது. அவருக்கு முறையாக வழங்கப்படாத, முன்தேதியிடப்பட்ட போலி ஆவணம் அது. அதில் கூறப்பட்டிருந்த அவதூறுகளைக் கேள்விக்குட்படுத்த வாய்ப்புகூடக் கொடுக்கப்படவில்லை. ஆனால் இடிக்கும் பணி தொடங்கிவிட்டது.
அதுகுறித்து ஃபாத்திமா கூறுகையில்,
“எனக்கே எனக்கான என் வீட்டில் குடியேறுவது குறித்து நான் கனவு கண்டுகொண்டே இருந்தேன். அதன் ஒவ்வொரு மூலையையும் அலங்கரிக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். அதற்காக விளக்குகள், திரைச்சீலைகள் என்று ஒவ்வொன்றாகத் தேர்ந்தெடுத்தேன். ஆனால் என் வீட்டுக்குள் காலடியெடுத்து வைப்பதற்குள், அதை இடித்துத்தள்ளிவிட்டார்கள்.” என்றார்.
ஃபாத்திமா சற்று நேரத்திலேயே அங்கு வந்து சேர்ந்துவிட்டார். ஆனால் அவருக்கு அன்றைய தினத்தின் நினைவுகள் அச்சமும் கையறுநிலையும் கலந்த ஒரு மங்கலான சித்திரமாகவே இருக்கிறது. அங்கு இடிபாடுகளின் புழுதிகள் அடங்கியபோது அங்கு வீடு இல்லை என்பதை மட்டுமே அவரால் உணர முடிந்தது. அவருக்கென்று சொந்தமாக ஓர் இடமும் இல்லை. திரும்பிச் செல்ல ஓர் இல்லமும் இல்லை.
அவரது தந்தை ஜுனாயித் அன்றைய நாளின் உணர்ச்சிகளில் முடங்கிவிடவில்லை. மாறாக, சட்டப்பூர்வமாக அதை எதிர்கொள்கிறார். அனைத்தையும் முறையாக ஆவணப்படுத்தியிருக்கிறார். ஒவ்வொரு ஆணைகள், சமர்ப்பித்த ஒவ்வொரு ஆவணங்களும், ஒவ்வொரு ரசீதுகளும் என அவரது நேர்த்தியான ஆவணச் சேகரிப்பு, அவரது இழப்புகளின் பாரத்தையும், அவை பதிலளிக்கப்படாமல் போவதைக் கேள்விக்குள்ளாக்குகின்ற ஒரு மௌன சாசனமாக உள்ளது. வழக்கைப் பற்றி அவரிடம் கேட்டவுடனே, பக்கங்களை வேகமாகத் திருப்பி, தேதிகள், தரவுகள் மற்றும் சாட்சிகள் என அளிக்கத் தொடங்குகிறார். இந்தக் கட்டட இடிப்பு நியாயமற்றதும், சட்டவிரோதமுமான செயல் என்பது அவருக்குத் தெரியும். இங்கு வழிமுறைகள் (செயல்முறைகள்) சீர்கெட்டுப் போயுள்ளன. அந்த வீடு ஒருபோதும் இடிக்கப்பட்டிருக்கக் கூடாது.
“இரண்டு ஆண்டுகளாக நாங்கள் நீதிக்காகக் காத்திருக்கிறோம்” என்றார் ஜுனாயித்.
“கடனும் வேறு இருக்கிறது. நாங்கள் பல துயரங்களையும் துன்பங்களையும் ஒரே நேரத்தில் எதிர்கொள்கிறோம்” என்று தொடர்ந்தார்.
“ஒரு தந்தை விரும்புவதெல்லாம் என்ன? தனது மகள் வாழ்வதற்குச் சொந்தமாக ஒரு வசிப்பிடம். அதற்காக நான் கடுமையாக உழைத்தேன். ஆனால் அரசு அதை ஒரே நாளில் நாசமாக்கிவிட்டது” என்றார் ஜுனாயித்.
இத்தனையும் கடந்தும், ஃபாத்திமா மனமுடைந்து போகவில்லை. மனவுளைச்சலை எதிர்த்துப் போராடுகிறார். நம்பிக்கையை அவர் கைவிடவில்லை.
“அல்லாஹ்வின் தீர்ப்பின் மீது ஒருவர் நம்பிக்கை கொள்ள வேண்டும்” என்றார் அவர்.
பெரும்பாலான பெண்கள் தங்கள் கனவுகளைக் கட்டமைக்கக்கூடிய வயதில் ஃபாத்திமாவின் கனவு அவருடைய கண்முன்னே நொறுக்கப்பட்டது. ஆனால் அவர் பின்வாங்கவில்லை. அவர் தொடர்ந்து பிள்ளைகளுக்குப் பாடம் நடத்துகிறார். அவர் குழந்தைகளை வளர்த்தெடுக்கிறார். அவரது சட்டப் போராட்டத்தைத் தொடர்கிறார். ஃபாத்திமா தளராத ஓர் உறுதியைத் தனக்குள் கொண்டுள்ளார். காலம் தாமதமானாலும், நீதி மறுக்கப்படுவதில்லை என்ற நம்பிக்கை அதுதான்.
அவர் கட்டிய வீடு இடிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அவர் தனக்குள் சுமக்கும் வீடானது மனவுறுதியாலும், அன்பாலும் நம்பிக்கையாலும் உருவானது. அது அசையாமல் உறுதியாக நிற்கும்.
மொழிபெயர்ப்பாளர்: பிரவீன் துளசி
This piece has been translated by Prawintulsi. Read the original in English here.